காட்சி—11
இடம் - வசந்த மண்டபம்.
காலம் - மாலை
(குலோத்துங்கனும், உதயணரும் வருகின்றனர்.)
குலோத்:- மதிவாணரே! புகழேந்தியைக் காண்பது கூடக் கடினமாயிருக்கிறதே! சில நாட்களாக அரசவைக்குக்கூட வருவதில்லையே! காரணமென்ன?
மதிவாணர்:- ஆம்; அரசவைக்கு மாத்திரமல்ல, அரண்மனைப் பக்கமே வருவதில்லை. கூத்தர் புலவர்களைச் சிறையிட்டு வருத்துவதில் அவருக்கு அதிருப்தி அதிகம்.
குலோத்:- இது தங்களுக்கு எப்படி தெரியும்?
மதிவாணர்:- என்னிடமே நேரில் இதைப்பற்றிப் பல முறை சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.
குலோத்:- அரசியல் விஷயங்களில் பிறர் தலையிடுவது குற்றமல்லவா? மேலும் இவரால் பொதுஜன அமைதிக்கும் பங்கம் விளையும் போலல்லவா தெரிகிறது?
மதிவாணர்:- ஆம்; ஆனால் இதைப்பற்றி அவர் வேறு யாரிடத்திலும் பிரஸ்தாபித்ததாகத் தெரியவில்லை.
(கூத்தர் வருகிறார்.)
குலோத்:- புலவரே! வாருங்கள். இப்படி அமருங்கள். ஏன் ஏதோ பதட்டத்துடன் இருப்பதுபோல் தோன்றுகிறதே. காரணம் என்ன?
கூத்தர்:- காரணம் புகழேந்திதான். நான் அகம்பாவம் பிடித்து அலைகிறேனாம். பொறாமையால் புலவர்களைச் சிறையிட்டு வதைக்கிறேனாம். ஊர் முழுதும் தூற்றுவதோடு இன்று நேரிலும் என்னை அவமதித்துப்