கழுமலப் போர்
1. போரின் பொதுவியல்பு
உலக வாழ்வில், போர் ஓர் இன்றியமையா நிகழ்ச்சியாக உருவெடுத்து விட்டது. உள்ளத்தில் இயல்பாக ஊறி எழும் பல்வேறு உயிர்க் குணங்களுள் போர் உணர்வும் ஒன்று. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையா உணவுப்பொருள்களை உளவாக்கி உயிர்களுக்கு வாழ்வளிப்பது நிலம், அந்நிலவுலகின் இயல்பு. எங்கும் ஒரே தன்மைத்தாக அமையவில்லை. இயற்கை வளம் மிக்க காடாய்க் காட்சி அளிக்கிறது ஒரு பால், நீர்வளம் மிக்க நன்செய்யாய் நலம் பெற்றுளது ஒரு பகுதி. ஒரு பகுதி மலைவளம் மிக்க மேடாய் மாண்புற்றுளது. ஒரு பகுதி கடல் வளம் கொழித்துக் கவின்பெறக் காண்கிறோம். அம்மட்டோ! ஒரு பகுதி, ஒன்றிற்கும் உதவா உவர் நிலமாய் உளது. மற்றொரு பகுதி மணல் பரந்து மாட்சி இழந்துளது. இயற்கை நிகழ்ச்சியாலாம். இவ்வேற்றத் தாழ்வுகள், நிலவளவோடு நின்றுவிடவில்லை, அவை அந்நிலத்தில் வாழும் மக்கள் வாழ்விலும் இடம் பெற்றுப் பெரும் புரட்சிகளை உருவாக்கியுள்ளன. நிலங்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப, அந்நிலத்து மக்கள் வாழ்விலும் ஏற்றத் தாழ்வுகள் இடம் பெற்று விட்டன.
நன்செய் போலும் நிறைபயன் நல்கும் நிலப்பகுதிகளில் வாழும் வாய்ப்பினைப் பெற்றவர், பேரின்பப் பெருவாழ்வு