416
நீல நிறமுள்ள கழுத்தை உடையதாக இருக்கிறது. உடம்பெல்லாம் வெளிர் நீலம்; கழுத்துப் பக்கம் கருநீலம். நாம் அஞ்சும் பகையாகத் தோன்றும் பாம்பு, பெருமானுக்கு நகையாக இருக்கிறது.
காரைக்கால் அம்மையார் இறைவர் திருமேனியைப் பார்க்கிறார். அவருடைய நீலகண்டத்தை உற்றுப் பார்க்கிறார். அதன் கரிய நிறத்தைக் கூர்ந்து பார்க்கிறார். பிறகு எம்பெருமான் திருமார்பில் படம் எடுத்துப் படரும் பாம்பைப் பார்க்கிறார். அதன் கழுத்தும் கரியதாக இருக்கிறது. பெருமான் கழுத்திலும் கறுப்பு; பாம்பின் கழுத்திலும் கறுப்பு. இரண்டும் இப்படி இருப்பதற்கு என்ன காரணம்? ஒருகால் எம்பெருமானிடம் வருவதற்கு முன் சுத்தக் கழுத்தை உடையதாக இருந்து அவரிடம் சார்ந்தபிறகு அந்த நிறம் வந்ததோ?
காரைக்கால் அம்மையார் யோசனை பண்ணுகிறார். சிவபெருமானையே ஒரு கேள்வி கேட்கிறார். விசித்திரமான கேள்விதான். குழந்தை தன் தகப்பனாரை நோக்கிப் பலபல கேள்விகளைக் கேட்கும். அவ்வாறு காரைக்கால் அம்மையார் பெருமான நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்கிறார். ‘இப்படியெல்லாம் கேட்பதில் என்ன நன்மை இருக்கிறது? சிவபெருமான் விடை சொல்லப் போகிறாரா?’ என்று நமக்குத் தோன்றும். எப்படியாவது இறைவனோடு உரையாட வேண்டும்; அவன் விடை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அம்மையார் கேட்டே விடுவார். அப்படி எத்தனையோ கேள்விகளை அவர் கேட்டிருக்கிறார். இனியும் கேட்பார்.
தனித் துண்டுகளாக வண்ணம் பூசிய கட்டைகள் சிலவற்றைக் குழந்தைகள் விளையாடுவதற்காகச் செய்து பெட்டியில் வைத்து விற்கிறார்கள். அந்தக் கட்டைகளை வேவ்வேறு வகையில் அடுக்கி வீடு மாதிரியும், கோபுரம் போலவும் வேறு வடிவங்கள் போலவும் உருவாக்கலாம். குழந்தைகள் உற்சாகமாக வைத்து விளையாடும் பண்டங்கள்