பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

445

னாலும், அவன் தருவது பெரிதென்று மற்றவர்கள் எண்ணினாலும், அன்பர்களுக்கு அத்தகைய பதவி மிகவும் சிறியதாகத் தோன்றும். அவனுக்குத் தொண்டாற்றும் இன்பமே எல்லாவற்றிலும் பெரிதாகத் தம் அனுபவத்தில் கண்டு பெருமிதத்தோடு இருப்பவர்கள் அன்பர்கள். ஆகவே,

அண்டம் பெறினும் அதுவேண்டேன்

என்கிறார் அம்மையார்.

இறைவன் எதை வேண்டுமானலும் அருள் செய்பவன். எல்லாவற்றிலும் சிறந்த பொருளை வழங்குகிறவன்; பெரு வள்ளல். இறைவன் அத்தகைய வள்ளலாக இருக்கிறான். அவன் அவ்வாறு வழங்கும் வள்ளன்மை பெரிதுதான். ஆனால் அதை வேண்டாம் என்று சொல்பவரின் பெருமிதம் அதைவிடப் பெரியது.

"கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று;அதன் எதிர்
கொள்ளேன் என்றால்
அதனினும் உயர்ந்தன்று"

என்பது புறநானூறு. இறைவன் வழங்கும் வீட்டின்பம் மிகப் பெரியதுதான். பெரியது ஒன்றை வழங்கும் அவன் மாபெரும் வள்ளல். ஆனால் அதை மறுக்கும் பெருமிதம் அன்பர்களிடம் இருக்கிறது. அது இறைவனுடைய வள்ளன்மையை விடச் சிறந்தது. ஆகவே,

அண்டம் பெறினும் அதுவேண்டேன்

என்ற உறுதிப்பாடுடைய அம்மையார் மிகப் பெரியவர்.

தம்முடைய கருத்து இது என்று இறைவனிடமே அம்மையார் விண்ணப்பித்துக் கொள்கிறார்.

ஈதுஎன் கருத்து.