557
என்று இந்தக் குடும்பத்தைப் பற்றிச் சுந்தர்மூர்த்திசுவாமிகள் பாடுவார்.
இவ்வாறு இரண்டு பெண்டாட்டிக்காரனாக இருக்கும் சிவபெருமானைப் பார்த்துக் காரைக்காலம்மையார் ஒரு கேள்வி கேட்கிறார். இறைவனை நெருங்கி அன்பு செய்பவராதலின் அவனிடம் பல கேள்விகளைக் கேட்கும் உரிமை பெற்றவர் அவர். அவர் எழுப்பும் பல வகை வினாக்களை நாம் பார்த்து வருகிறோம்.
இறைவனையே நேரில் விளித்து இந்த வினாவை எழுப்புகிறார் அம்மையார். "வெள்ளை வெளேர் என்றிருக்கும் திருநீற்றையும் எலும்பையும் அணியும் பெருமானே!” என்று இறைவனை அழைக்கிறார்.
தவளநீறு என்பி அணியீர்!
“இந்த இரண்டு தேவிமாரையும் என்றும் பிரியாமல் வைத்திருக்கிறீர் நீர். அவர்களை விட்டு நீர் ஒருகாலும் என்றும் பிரிந்ததில்லை.
என்றும் பிரிந்து அறியீர்
"எப்போதாவது இருவரையும் விட்டுப் பிரிந்து இருந்ததில்லை. சிறிது நேரம் கங்கையை விட்டுவிட்டு உமாதேவியுடன் மட்டும் இருக்கலாம் என்று எண்ணிப் பிரிந்ததில்லை. அப்படியே உமாதேவியை விட்டுக் கங்கையுடன் சில் காலம் இருக்கலாம் என்று எண்ணியும் இருந்ததில்லை. எந்தக் காலத்திலும் அவர்களினின்றும் பிரிந்து நின்றதில்லை."
இரண்டு பெண்டாட்டிக்காரர்களில் பெரும்பாலோருக்கு இரண்டாம் தாரத்தின் மேல் அதிகக் காதல் இருக்கும். சிலருக்கு மூத்த மனைவியிடத்தில் விருப்பம் இருக்கும். இரண்டு பெண்டாட்டிகளையும் பிரியாமல் வாழும் இறைவனுக்கு மலைமங்கை சலமங்கை ஆகிய இருவர்களுள் யாரிடத்தில் அதிக