பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

563

சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சின் உள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.

‘இவனை மறைத்து வைத்ததனால் யாரும் இவனைக் காண முடியாது. உள்ளே அடைத்து வைத்ததனால் இவன் எங்கும் போகவும் முடியாது என்று எண்ணும்படி அடைத்து வைத்தோம், மறைத்து வைத்தோம்’ என்கிறார். எம் நெஞ்சில் வேறு ஒன்றும் இல்லை. அங்கே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற தீய பொருள்கள் இருந்தால் இந்த அருமையான பொருளை அவற்றோடு சேர்த்து வைக்க இயலாது. எம் நெஞ்சில் அத்தகைய அழுக்குகள் இல்லை. சுத்தமான தனி நெஞ்சு அது. இதுதான் யாரும் புகாத இடம் என்று எண்ணி, யாரும் அறியாத மாயமான முறையினால் அந்தப் பரம்பொருளை உள்ளே வைத்து வெளியே போகாமல் அடைத்துவிட்டோம் என்று சொல்கிறார்.

ஆர்வல்லார் காண
அரனவனை? அன்பு என்னும்
போர்வை யதனாலே
போர்த்துஅமைத்துச்—சீர்வல்ல
தாயத்தால் நாமும்
தனிநெஞ்சின் உள்அடைத்து
மாயற்தால் வைத்தோம்
மறைத்து.

‘அரனை அன்பு என்னும் மூடுதுணியினாலே போர்த்து உள்ளே அமையச் செய்து, சிறப்பு மிக்க உரிமையால் நாம் வேறெதுவும் தன்னிடம் இல்லாத எம்முடைய தனி நெஞ்சின் அந்தரங்கத்திலே அடைத்துப் பிறருக்குத் தெரியாத மாயமான முறையினாலே மறைத்துவைத்துவிட்டோம். ஆகையால் அவனை ஆர் காண வல்லார்?"