உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

35


மீதிலும் ஆபரணமாக இருக்கும்; வெஞ்சினத்திற் பற்பட்டால் மீளாது-அதன் கொடிய சினத்திலே அதனுடைய நச்சுப்பல் எவர் மீதாவது பட்டதானால் அவர் உயிர் போய்விடுவதன்றி ஒரு போதும் மீளாது.

வாழைப்பழம்: நஞ்சிருக்கும்-நன்கு கனிந்ததால் நைந்து இருக்கும்; நாதர் முடி மேல் இருக்கும்-இறைவன் திருமுடி மேலாக அபிடேகம் பொருளான பஞ்சாமிர்தமாகவும் விளங்கும்; வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - துணையுணவாகக் கொள்ளுங் காலத்தே பற்களிடையே சென்றானால், வயிற்றுனுட் செல்வதல்லாமல் மீள்வதில்லை; வெஞ்சினம் - தொடுகறி; துணை உணவு.

பாம்புக்கும் எள்ளுக்கும்


ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளனவே யோது. (51)

பாம்பு: ஆடிக்குடத்து அடையும்-படமெடுத்து ஆடியபின் குடத்திலே சென்று அடைந்திருக்கும்; ஆடும் போதே இரையும்-ஆடுகின்ற போதிலேயே சீத்துப் பூத்தென்று இரைச்சலிடும்; மூடித் திறக்கின் முகம் காட்டும் - குடத்தை மூடித் திறந்தால் தன் தலையை வெளியே உயர்த்திக் காட்டும்; ஒடி மண்டை பற்றில் பரபரெனும் - விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டாற் பரபரென்று சுற்றிக் கொள்ளும்; பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் - உலகிற் பிளவு பட்ட நாக்கும் அதற்கு உண்டாயிருக்கும்.

எள்: ஆடிக் குடத்து அடையும் - செக்கிலே ஆடி எண்ணெயாகிக் குடத்திலே அடைந்திருக்கும்; ஆடும்போதே இரையும் செக்கிலே ஆடும்பொழுதிலேயே இரைச்சல் செய்யும்; மூடித் திறக்கின் முகங்காட்டும் - குடத்து எண்ணெயை மூடிவைத்திருந்து பின் திறந்து பார்த்தால் பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும்; ஓடி மண்டை பற்றில் பரபரெனும் - விரைய மண்டையிலே தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும்; பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் - உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும். (இதனால்) உற்றிடு பாம்பு எள்எனவே ஓது - அடைந்திடும் பாம்பும் எள்ளும் சமமாகும் என்று சொல்லுக.

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும்


பெரியவிட மேசேரும் பித்தர் முடி யேறும்
அரியுண்ணு முப்புமே லாடும்-எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலை ராயன்வரையில்
பாம்பு எலுமிச்சம் பழம். (52)