பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 69


உரிமை உடையவர்களே என்பது திருக்குறள் கருத்து. இதனைத்தான் பாரதி,

“சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”

என்று பாடினான்;

“சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்”

என்று தெருக்கூட்டும் பணிக்குப் புகழ் சூட்டுகின்றான்.

குடும்பம், சமூகம், சமுதாயம் என்ற அமைப்புக்கள் தோன்றிய உடனேயே அரசு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. ஏனெனில் பலர் கூடி வாழும்பொழுது சிக்கல்கள் தோன்றாமல் இருக்க இயலாது. அது மட்டுமல்ல. சொத்துடைமை வேறு உருவாகிறது. சொத்துடைமை தோன்றிய உடனேயே ஆக்கிரமிப்புகள் நிகழாமல் பாதுகாக்கவும், சொத்துடைமைகளைப் பாதுகாக்கவும் அரசு தோன்றுகிறது. சொத்துடைமையைப் பாதுகாக்கத் தோன்றிய் அரசுகள் இன்றுவரை சொத்துடையவர்களுக்கும் சொத்துக்கும் பாதுகாப்புக் கொடுக்க இயங்கியுள்ளனவேயன்றிச் சாதாரண மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இங்கும் அங்குமாகச் சில அரசுகள், சொத்துடைமை பெற்றிருக்கின்ற வர்க்கத்தினருக்கு உழைப்பவர்கள் வேண்டுமே என்ற கவலையில், உடலில் உயிர் தங்கி வாழ்ந்து உழைக்கச் சோறு முதலியன போடுகின்றன. இன்னமும் ஏழைகளின் எண்ணிக்கை கூடுதலாகத்தான் உள்ளது. பலர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். திருவள்ளுவர் உழைப்பவர் உலகத்தைதொழிலாளர் உலகத்தைப் பாராட்டியவர்; போற்றியவர்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

(1033)