பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மே 13


உயிர்க்குலம் அனைத்தும் ஒரே தொகுதியென உணர்ந்து தொழுதிட அருள்க!


இறைவா, நீ அகண்டமான பொருள். எல்லையற்ற பொருள். இறைவா! நான் உன்னை வழிபடும் வழி, நானும் எல்லை அற்ற நிலையில் அன்பு காட்டுவதேயாம்.

இறைவா, எல்லைகள், வேலிகள், குறுக்குச் சுவர்கள், பிரிவுகள் இவையெல்லாம் சைத்தானின் கருவிகள். இந்தச் சைத்தானின் பேயாட்டமே இன்றைய உலகின் ஆட்டம். இறைவா, எங்களைக் காப்பாற்றக்கூடாதா?

இறைவா, இந்த மனிதகுலம் பேய்க் கோட்பாட்டுப் பிரிவினைகளில் கிடந்து உழல்கின்றதே. இறைவா, களவும் காவலும் ஒழுக்கங்களாக மாறிவிட்டனவே. கெட்ட கலகம் செய்து கொள்கிறார்களே. நீயே உயர்வற உயர்ந்தவன்; உலகம் ஆனவன்; எல்லைகளை நீத்து ஓங்கி உயர்ந்து நிற்பவன்.

இறைவா, நான் உன்னைப் போற்றுகின்றேன். வணங்குகின்றேன், வாழ்த்துகின்றேன். இறைவா, நான் நீயாக வேண்டாமா? நின் பண்புகளை உபாசித்து உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டாமா? இறைவா, அருள் செய்க!

உயிர்க்குலம் அனைத்தும் ஒரே தொகுதி என உணர்ந்து ஒழுகிட அருள்க! இறைவா, உயிர்க் குலத்தினிடம் காட்டும் அன்பே தவம், தொண்டே, வாழும் நெறி. இறைவா. அருள் செய்க!