பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 20


நடுவுரை கூறி வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, நாவில் நடுவுரையாய் நின்றருளும் தலைவா! நின் நீதி தழைத்திடுக. போற்றி! போற்றி! இறைவா, மனித உலகம் அன்பு, அறம், நீதி, ஒப்புரவு என்ற நான்கு தடங்கள் அமைந்த அகலவழிப்பாதையில் சென்று கொண்டிருந்தால் ஆபத்தில்லை. மண்ணிலேயே விண்ணகம் ககாணலாம். ஆனால் நடப்பதுதான் இல்லை.

தீமைகளுக்கெல்லாம், தீமை நாவிலிருந்துதான் தோன்றுகிறது. நாவடக்கம் தேவை.

இன்னாதன சொல்லக்கூடாது. புறங்கூறல் ஆகாது. தீக்குறளைச் சென்றோதக்கூடாது. பயனில சொல்லக் கூடாது. பொய்கூறக் கூடாது. நடுவுநிலை பிறழ்ந்து பேசக் கூடாது. இறைவா, நாவிற்கு-நாவினால் சொல்லப்படும் சொற்களுக்கு எவ்வளவு வரையறை! கட்டுப்பாடு.

இறைவா, நான் என் நாவை அடக்கி வாழ்ந்திட அருள் செய்க! ஆய்ந்து ஆய்ந்து சொற்களை அறிந்து கூறும் நற்பழக்கத்தில் என்னை நெறிப்படுத்தியருள்க! நான் நடுவுநிலை பிறழ்ந்து சார்புகள் வயப்பட்டு எதையும் கூறக்கூடாது, பேசக் கூடாது.

நடுவுநிலை!- ஆம், இறைவா, விருப்பு-வெறுப்பு, காய்தல்-உவத்தல் ஆகியனவற்றிற்கு இரையாகாமல் எது வாய்மையோ, எது நன்மையோ அதைச் சொல்லுதல் வேண்டும். இத்தகு நடுவுரைகள் இறைத்தன்மையுடையன. நடுவுரையாகவே இறைவன் நின்றருள் செய்கிறான். இறைவா, நின்றன் திருவுள்ளம் மகிழத்தக்க வகையில் நடுவுரை கூறி வாழ்ந்திட அருள் செய்க!