பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

221



ஜூலை 23


வேற்றுமைகளை, பரந்த மனப்பான்மையுடன் அங்கீகரிக்கும் மனப்பக்குவத்தை அருள்க!

இறைவா, சோதியனே! துன்னிருளே! நின் இயல் போற்றி! போற்றி!! ஒளி, இருள், உண்மை, இன்மை, இவை உலகத்தியற்கை! இவ்வேறுபாடுகள் தவிர்க்க இயலாதன; என்றும் உலகம் ஒரே அச்சாக இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை.

இறைவா, எனது உடலிலேயே விலை மதிக்கமுடியாத உயிரும் இருக்கிறது. உயிருக்கு உயிராக நீயும் இருக்கிறாய். அதே உடம்பில் அழுக்கும் மலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நான் மூக்கைப் பிடித்துக் கொண்டு உடம்பைக் காலி செய்து விட்டேனா அல்லது நீதான் ஓடிவிட்டாயா?

உலகத்தில் ஏராளமான வேற்றுமைகள் உள்ளன. இந்த வேறுபாடுகள்தாம் நுகர்வுக்கு இனிமையாக உள்ளன. இவ்வேறுபாடுகள்தாம் உலக இயக்கத்திற்கு உந்து சக்திகளாக இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இங்ஙனம் வேற்றுமைகளுக்கிடையே வாழும் நான் என்னளவில் மட்டும் வேற்றுமைகளைச் சீரணித்துக் கொள்ள மறுக்கிறேன்.

கருத்து வேற்றுமைகள், கொள்கை. கோட்பாட்டு வேற்றுமைகள் - இவைகளையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன். இந்த வேற்றுமைகளுக்கு இசைந்தே - இணைந்தே வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

இறைவா, இந்த அடாத வழியிலிருந்து திருப்பி அழைத்துக் கொள். வேற்றுமைகளைப் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அருள் செய்க! வேற்றுமைகளின் காரணமாகப் பகை கொள்ளாத பேருள்ளத்தினை வழங்கிடுக. வேற்றுமைகள் பிரிவினைகளாகி விடாதவாறு காத்தருள் செய்க!

ஒன்றாக வாழ்தல், நன்றாக வாழ்தலுக்கு அடிப்படை என்ற உன் உபதேசத்தை உயிர்க் கொள்கையாக ஏற்பேன்; வாழ்வேன், அருள் செய்க!