பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

295






அக்டோபர் 5


இறைவா, நன்மையே ஒழுக்கமாய் அமைந்திட அருள்க!


இறைவா, எனக்கு எத்தனையோ ஆர்வ நிலைகள். ஆம், இறைவா! எல்லாம் நன்மையைச் சார்ந்த ஆர்வங்கள்தாம். ஆனாலும் அடைவு இல்லை, மகிழ்ச்சி இல்லை. ஏன் இறைவா?

நன்மையை எண்ணினால் போதுமா? எழுதினால் போதுமா? சொன்னால் போதுமா? நன்மை செயல்களாக, ஒழுக்கங்களாக மாறி வளர வேண்டும். அப்போதுதான் நன்மையால் பயன் உண்டு.

அலைகடல் போல் அலையும் மனத்தில்-உள்ளத்தில் நன்மை வேரூன்றி நிற்காதே! அலைக்கழிவு செய்யுமே! இந்த நிலைகளில் வெற்றி பெற வேண்டும்.

ஊன்றிய உணர்வு தேவை. ஒரு நெறிப்பட்ட செயல், நன்மையாகவே அமைந்த ஒழுக்கம்-இவையே வாழ்வின் ஆக்கம். இறைவா, இவற்றை எனக்கு அருள் செய்க!

தீமையை வெற்றி கொள்ள நன்மையாலேயே முடியும். எண்ணத்தில் நன்மை. சொல்லில் நன்மை செயலில் நன்மை. நன்மையே ஒழுக்கம். ஒழுக்கமாய் அமைந்தது நன்மை. இறைவா, அருள் செய்க!

இறைவா, நன்மையே ஒழுக்கமாய் அமைந்திட அருள் செய்க!