பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

313





அக்டோபர் 23


தாயாக வந்திருந்து என்னை வளர்த்திடு தயாபரனே!

இறைவா! பெண்ணின் நல்லாளொடு வீற்றிருக்கும் பெருந்தகையே! தாயாக இருந்து வளர்க்கும் தயாபரனே! ஆம், என்னை வளர்க்க ஒரு தாய் தேவை! என் உடலினை வளர்க்க, என் உயிரினை வளர்க்க, என் உணர்வினை வளர்க்க ஒரு தாய் தேவை. ஆம் இறைவா, திருத்தமுற வளர்க்க ஒரு தாய் தேவை!

தாய்க்கே, என்மீது தணியாத அன்பு. குறிக்கோளற்ற அன்பு! என் தகுதிகளைக் கடந்த அன்பினைத் தாய்தான் பொழிவாள். இறைவா, தாயன்பு இணையிலாதது! என் தாயை எனக்குத் தா!

என் வாழ்வினின்றும் என் தாயைப் பிரிக்காதே! என் பசியை நினைந்து சோறூட்டுவாள். நோய் வராமல் பாதுகாப்பாள். அணைத்து அமுதுாட்டுவாள். அடித்துத் திருத்துவாள்.

இறைவா, எனக்குத் தாய் தேவை. எப்போதும் தேவை. என் தாயை எனக்கு அருள் செய்! இல்லையேல் இறைவா, நீயே தாயாக வந்தருள் செய்!

இறைவா, தாயுமானவன் தானே நீ! அன்று தாயான உனக்கு இன்று தாயாக வந்தருள் செய்வது அரிதா? இன்றும் தாயாக வந்திருந்து என்னை வளர்த்திடு! வாழ்வித்திடு! இற்றைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் உனக்காட்செய்வேன்! அருள் செய்க!