பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





பிப்ரவரி 3


எல்லாருக்கும் நன்மை செய்தலே என் மதம்!


இறைவா! தவறுகளும், குற்றங்களும் பாவங்களாகி விடுமா? இவைகளை எல்லாம் நீ பாவங்கள் என்று கணக்கெடுத்துத் தண்டனை கொடுப்பாயா?

நான்தோறும் எண்ணற்ற தவறுகளைச் செய்கிறேன். இறைவா, என்னிடம் உள்ள குற்றங்களைப் பட்டியல் போட்டால் கணக்கில் அடங்கா. என்நிலை என்ன? நான் தவறு செய்கிறேன். ஆனால், நானாகச் செய்ய வில்லையே. என்னைச் சுற்றிவரும் சமுதாய அமைப்புமுறை என்னைத் தவறுகள் செய்ய நிர்ப்பந்தப்படுத்துகிறதே. இறைவா, நான் என்ன செய்வது? நான் நானாக வாழ இன்றைய சமுதாயம் அனுமதிக்கவில்லையே. இன்று முறையாக வாழ வேண்டுமானால்-ஏதாவது சில நல்ல காரியங்கள் செய்ய வேண்டுமானால் கூட, தவறு செய்யாமல் செய்ய முடியாது போலிருக்கிறதே. இதுதான் இன்றைய சமுதாயநிலை. இன்று உண்மை ஏற்கப்பெறமாட்டாது போலும், பொய்ம்மைக்கே வரவேற்பா? இந்தச் சூழ்நிலையில் குற்றங்களும் தவறுகளும் இல்லாமல் வாழவே முடியாதா? ஆம் இறைவா! இதுதான், இன்றைய சமுதாய அமைப்பு. நானும் உலகத்தோடு ஒட்டிச் செல்கிறேன். ஆனால் ஒன்று இறைவா! நான் யாருக்கும் தீமை செய்ததில்லை. செய்ய நினைத்ததும் இல்லை. இறைவா! எல்லாருக்கும் நன்மை செய்வதே என் மதம்!