பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

125


அவள் மூலம் அவன் பெறும் நலனே அவளாக இருக்கிறான். வாழ்க்கைத் துணை நலம் என்ற பெயர் ஆழ்ந்த பொருள் உடையது.

தமிழகத்துக் கற்புக் கொள்கை உடலைக் கடந்தது. உயிரில் காண்டது. மறந்தும் பிறர் நெஞ்சு புகாத கற்பே கற்பு. பெண்ணின் கற்பு கணவனால் காப்பாற்ற இயலாத ஒன்று. ஆதலால் வாழ்க்கைத் துணை, தன் கற்பைத் தானே காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். ஆனால் அவள் அவன் கற்பைக் காப்பாற்ற முடியும். அவள், தன்னுடைய தலைவ னுக்குப் பெட்புற ஒழுகின் அவன் நிச்சயமாகக் கற்புடையவனாக இருப்பான். அவளுக்கே தற்கொண்டானைப் பேணும் பொறுப்பைக் கொடுத்தார். தன் தலைவனுக்குக் கொடுத்த சொல்லையும் காத்துத், தன் தலைவன் கொடைப் பண்பின் காரணமாக மற்றவர்கட்கு வழங்கிய சொற்களையும் காத்து, முடிவாகக் குடும்பத்தின் நற்புகழையும் காப்பவள் வாழ்க்கைத் துணை நலம் ஆவாள். வினைமேற் செல்லும் தலைவன், வினையின்கண் பட்ட இடுக்கண்களால் ஒரோ வழிச் சோர்வடையலாம். ஆனால் வாழ்க்கைத் துணைநலம் சோர்வடையக் கூடாது. அவனுடைய தோல்விகளை வெற்றிகளின் படிகளாக்கவேண்டும். அவன் உள்ளத்துச் சோர்வுகளை அகற்றிச் சுறுசுறுப்பாக்கி விட வேண்டும். தலைமகனின் வருவாய்க்குத் தகுந்த வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும். அவன் தரும் செல்வத்தைக் கொண்டு பல பேரறங்கள் செய்ய வேண்டும். அன்னை காமாட்சி நாழி அரிசி கொண்டு அறங்கள் பலவற்றைக் காஞ்சியில் செய்த தாகக் கூறும் வரலாற்றின் நுண்பொருள், வாழ்க்கைத்துணை நலமாக அமைந்திருப்பவர்கள் உணரத்தக்கது. இத்தகு வாழ்க்கைத் துணை நலத்தைப் பெற்றவன் சொர்க்கத்தின் வாயிலை அடைந்து விட்டான். இல்லை, அவனுடைய வாழ்க்கையில் சொர்க்கம் வந்து அமைந்துவிட்டது என்பது தான் சேக்கிழார் - வள்ளுவர் ஆகியோர் காட்டும் உண்மை.