சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்
211
சுந்தரர் வாழ்ந்த காதலின்ப வாழ்க்கை-துறவியரும் தொழும் வாழ்க்கையாயிற்று. எப்படி? சுந்தரரும் சேக்கிழாரும் கூறுமாறு அறிக.
ஆதலால், பொருள் நிலையில்லாதன என்று கருதிப் பொருள் நெறியை அலட்சியப்படுத்துதல் வாழும் நெறியன்று. அத்தகையதொரு மனப்போக்கு இந்தியாவில் வளர்ந்ததால் தான் இந்தியா ஏழை நாடாகியது. பற்றி நின்று படரும் கொம்புகள் அழியுமாயின் கொடியும் அழியத்தானே செய்யும். அதனாலன்றோ வறுமையை மாணிக்கவாசகர்,
நல்குரவென்னும் தொல்விடம்
(திருவாசகம் போற்றித் திரு.40)
என்று கூறுகின்றார். திருமந்திரமும்,
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
(திருமந்திரம் 704)
என்று அழகுபடக் கூறுகிறது. பொருளை, பொருளுக்காக நெறியில்லாத நெறியில் ஈட்டுவது தவறு. பொருளை, பொருளின் பயன் கருதித் துய்ப்பித்துத் துய்க்க ஈட்டுதல் நெறி சார்ந்த வாழ்க்கை. இதுவே சைவ சித்தாந்தச் செந்நெறியின் சிறப்புடைய வாழ்க்கை. இங்ஙனம் துய்த்தலுமாகிய அறம் நிகழ, காதல் மனையறத்தைச் சிவநெறி ஏற்றுப் போற்றி நடத்துகிறது. தமிழர் சமயநெறியின் மனையறம் அன்பையே உயிர் நிலையாகக் கொண்டது.
............எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொரு மித்து-ஆதரவு
பட்டதே இன்பம்
(தனிப்பாடல் திரட்டு : ஒளவையார் - 105)
என்ற வாக்கு அறிக. அன்பும் இன்பமும் பிணைக்கும் ஆற்றலுடையவை. தமிழரின் சமயம் சார்ந்த வாழ்க்கை நெறியில் காதல் மணமே பெருவழக்காக இருந்தது. தமிழரின் வாழ்வியலில் இயல்பாக மலர்ந்த உள்ளங்கள் காதலிற்