பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



புண்ணியத்தின் பயன் பணம்!
பாவத்தின் பயன் ஏழைமை.

என்ற தத்துவம் தோன்றியது. இதன் மூலம் பணக்காரன் மதத்தின் அங்கீகாரத்தோடு சுரண்ட முடிந்தது. ஏழைகளின் உரிமைக்குரல்-வாழ்வுரிமைக்குரல் அடைக்கப்பெற்றது. இக் கருத்தினை ஒட்டி எழுந்ததே, “மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்” என்பது புண்ணியம் மிகமிக உயர்ந்தது- நிலையானது-திருவருள் இன்பத்தைப் பெறுவதற்குச் சாதகமாய் அமைவது. செல்வம் தாழ்ந்தது-நிலையில்லாதது. சிறந்த புண்ணியத்தின் பயனாக இழிந்த - தாழ்ந்த செல்வம் கிடைக்கிறது என்றால் அது பகுத்தறிவுக்கு விளங்கவில்லை! தொன்மைசான்ற சமய தத்துவத்திற்கும் இக்கொள்கைக்கும் இயைபில்லை.

புண்ணியத்தின் பயன் பணமுமல்ல!
பாவத்தின் பயன் ஏழைமையும் அல்ல!
புண்ணியத்தின் பயனாகச் சிறந்த சிந்தனை-குணம்-
பண்பியல்புகள் அமையும்!
பாவத்தின் பயன் இழிந்த குணம் அமையும்!

இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த தவறான சமயத்தைச் சார்ந்த நடைமுறைகளை மையமாக வைத்தே காரல்மார்க்ஸ் மதத்தைப்பற்றி ஒரு முடிவு செய்துவிட்டார். காரல்மார்க்ஸ் பார்த்தது ரஸ்புடினுடைய சர்ச்சு மதத்தையே யாம்.

“சர்ச்சு மதம் வேறு - பைபிள் மதம் வேறு” என்று ஒரு ஆங்கிலச் சான்று உண்டு.

அதுபோலவே நம்முடைய நாட்டிலும் நடைமுறைச் சமயமும் தத்துவமும் வேறுபட்டிருக்கலாம். நாம் இங்கு காப்பாற்ற நினைப்பது மனிதனை மனிதனாக வாழவைக்கும் உண்மைச் சமயத்தையேயாகும்.