பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1


[1]ஆலயங்கள் சமுதாய மையங்கள்


தமிழ்நாடு, ஆலயங்கள் நிறைந்த நாடு, விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள், தமிழ்நாட்டுக்கு அழகும் பொலிவும் ஊட்டுவன. கல்லெல்லாம் கலையாக்கி, பேசும் பொற் சித்திரமாக்கி, வழிபடும் தெய்வமாகவும் படைத்துக் காட்டிய திறம் தமிழர்க்கேயுரியது. சென்ற காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, தமிழ்நாட்டின் வரலாற்றை இயக்குவதில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன! தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையில், வளர்ச்சியில், மாற்றங்களில் மிகுதியும் பங்கு பெற்றிருந்தவை திருக்கோயில்களே என்பது வரலாறு கூறும் உண்மை. அன்றாட வாழ்க்கை முதல், மொழி, கலை, இலக்கியம், சமயம் ஈறான அனைத்துத் துறைகளிலும் திருக்கோயில்களுக்குப் பங்குண்டு. தமிழ்நாட்டின் அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகிய அனைத்துமே திருக்கோயில்களின் வட்டத்தைச் சார்ந்தே இயங்கியுள்ளன; வளர்ந்து வந்துள்ளன.


  1. திருச்சி அகில இந்திய வானொலியில் 27-4-1986 இரவு 9.30க்கு ஒலிபரப்பானது.