பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்கோயில் வளாகத்தைத் துய்மை செய்ததோடு திருக்கோயிலைச் சார்ந்திருந்த வீதிகளையும் தூய்மை செய்தார்.

“மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும்
திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளும் செம்பொற் றாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவிதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்”

என்ற இச்செய்தியினைப் பெரியபுராணம் பாராட்டும். ஆதலால், திருக்கோயிலைச் சார்ந்து ஒரு தூய்மை இயக்கம் வளர்ந்தது! சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப் பெற்றது! தூய்மையே இறைமை என்ற கொள்கை உயர்த்திப் பிடிக்கப்பெற்றது.

தமிழாய்வு

மானிட நாகரிகத்திற்கு ஊற்று தாய்மொழி. தாய் மொழிச் சிந்தனையில் வளர்ந்த சமுதாயம்தான் வளரும், மேம்பாடு அடையும்! தமிழரின் தாய்மொழியாகிய தமிழ், திருக்கோயில் வளாகத்தில் வளர்ந்தது! தமிழ், திருக்கோயில் தத்துவத்திற்கு உருக்கொடுத்தது. சங்கப் புலவர்களின் தலைவனாக இறைவன் அமர்ந்து தமிழை ஆய்வு செய்தனன். அவன் மட்டுமா? உமையம்மையும் உடனிருந்து ஆய்வு செய்தாள்; அறுமுகச் செவ்வேளும் அமர்ந்து ஆய்வு செய்தான். திருக்கோயில் வளாகத்திற்குள் தமிழ்ச் சங்கம் இருந்தது. தமிழறிஞர்கள் கூடினர்; தமிழை ஆய்வு செய்து வளர்த்தனர். புலவர்களுக்கிடையில் புலமைக் காய்ச்சல் வருவதும் உண்டு. சங்க காலத்திலும் புலவர்களுக்கிடையில் யாருடைய கவிதை சிறந்தது என்று கலகம் நடந்தது!