பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

75


கொழிக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் இறைவனுக்குள்ள திருவருள் என்னே! இவையெலலாம் வாழ்வியலின் நுண்ணிய கலையாகும்.

சுந்தரர் தம்மிடம் பெரிதும் அன்பு பூண்டவராயினும், சுந்தரர்-சங்கிலியார் இருவரது உரிமைகளில் இறைவன் சங்கிலியாரின் உரிமைக்கே பெரிதும் துணையாக நிற்கின்றார். சங்கிலியாரைப் பிரியேன். அதாவது திருவொற்றியூரை விட்டுப்பிரியேன் என்ற உறுதிமொழியைச் சுந்தரர் கொடுக்க முயற்சி எடுக்காமலிருந்தார். சுந்தரரின் அந்த முயற்சியின்மை யெல்லாம் சங்கிலியார்பால் நின்று, பெருமானே முறியடிக்கிறார். மெலியார்க்கு அரண்செய்து நிற்றலே சமுதாய அறம் என்ற வாழ்வியற் கலையை இந்நிகழ்ச்சி தெள்ளிதின் விளக்குகிறது.

நோயின்றி வாழ்தல் ஒரு கலை, உடம்பு ஒப்பற்ற கருவி. “உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே” என்பார் திருமூலர். உடலுக்கு இருவகையான நோய். ஒன்று உடலினைப் பாதுகாக்கும் வகையிலும் வளர்க்கும் வகையிலும் ஏற்படும் பசி என்னும் நோய், பிறிதொன்று உடலை நலிவுறச் செய்யும் நோய். இது உடற்கழிவுகள் நீங்காமையினாலும் சுற்றுப்புறச் சூழ்நிலையின் கேட்டினாலும் பொருந்தாப்பழக்க வழக்கங்களினாலும் வரும் நோய். இந்நோய்க்கு மருந்து வேண்டும். இறைவன் மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி நின்றருள் செய்கின்றான். புள்ளிருக்கு வேளுர் என்ற திருத்தலத்தில் அவன் வைத்திய நாதனாகவே எழுந்தருளியிருக்கின்றான். ஆதலால், வாழ்க்கையில் உடல் நலம் பேனும் வகையிலும் மருத்துவ வகையிலும் திருக்கோயில்களே முன்னிற்கின்றன.

புள்ளிருக்குவேளூர்த் திருத்தலத்தில் திருச்சாந்துருண்டை என ஒன்றிருக்கிறது. இந்த உருண்டையைத் தொடர்ந்து 45 நாட்கள் உண்டு வந்தால் தீராத வயிற்று