பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

பாராட்டிய வரிகள் அவரின் உண்மைத் தமிழ்த் தொண்டிற்கு அளிக்கப்பட்ட பாராட்டு! நல்ல தோழமைக்கு இலக்கணமாய் விளங்கியது கபிலர் - பாரி நட்பாகும். முந்தி விடைபெற்றுவிட்ட பாரியை நோக்கி 'என்னைத் தனியே விட்டுச் சென்றாயே!' என்று கபிலர், மண்ணுலகில் பாரி விட்டுச் சென்ற கடமையை நிறைவேற்றி விட்டு விரைவில் செல்வார். அதுபோல் நம் அடிகள் பெருமான் தவத்திரு சுந்தர சுவாமிகளின் பிரிவின்போது பாடிய இரங்கற்பாவில் 'விரைவில் உனைத் தொடர்ந்து வருகின்றோம்!” என்று கூறிய வரிகளே வாழ்வில் உண்மையாகிவிட்டது. தவத்திரு சுந்தர சுவாமிகள் மறைந்த சிறிது காலத்திலேயே நம் தவத் தந்தையும் மறைந்துவிட்டார்கள் அடிகள் பெருமானின் கவிதைகள் சத்தியம் தாங்கிய கவிமாலை என்பதே உண்மையாகும்.

‘எங்கே போகிறோம்?’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் மதுரை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சி, இலக்கியம், ஆன்மிகம், சமூக மேம்பாடு பற்றிய அற்புதச் சிந்தனைகளை உள்ளடக்கியதாகும். 'எங்கே போகிறோம்?’ என்று எழுப்பப்படுகின்ற வினாவே அற்புத வினா இது நாட்டை நோக்கி, சமூகத்தை நோக்கிக் கேட்கின்ற வினா மனச்சாட்சியோடு நடுநிலையோடு கேட்கின்ற வினா "கால்நடை என்றால் என்ன?’ என்று அருகிலிருப்பவரைக் கேட்கிறார். காலால் நடக்கின்ற ஆடு, மாடுகள் என்று அவர் பதிலளிக்க. 'மனிதனும் காலால் தானே நடக்கின்றான். அவனுக்கு இந்தக் கால்நடை மருத்துவமனை பயன்படுமா?’ என்று கேட்ட கேள்வியின் சிந்தனைக் கிளர்ச்சி, சிந்திக்க மறுக்கும் சமூகத்திற்குக் கொடுக்கின்ற சவுக்கடி விடுதலை விழா என்றைக்கு வீட்டு விழாவாகக் கொண்டாடப்படும்?' என்று கேட்கும் கேள்வியில் 'வழக்கமான சடங்குகளின் விழாவாக தீபாவளி, பொங்கல் திருநாள் போன்று அமைந்திடாமல் கடைக்கோடி மனிதனும் ஏற்றம் பெறும் உண்மையான விடுதலைப் பெருவிழா - மக்களின் விழாவாக மலர வேண்டும்’ என்ற சிந்தனை, உண்மையான மக்களாட்சித் தத்துவத்தை நடைமுறைப் படுத்துமாறு கூறுகின்றது. அயோத்தி மக்களுக்கு இருக்கும் நாட்டு உணர்வு இராவணன் ஆண்ட இலங்கை மக்களுக்கு இல்லாது போனது ஏன்? ஒடுக்கும் தலைமையின் கீழ்ப் பல்லாண்டு காலம் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மனோபாவம் அது இன்று நமது மக்களிடம் நாட்டுணர்வு மங்கிக் கிடக்கின்றதே! இன்று ஒடுக்கும் தலைமை