பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

383


வாழும் நேரத்தில் அகிம்சை பேசுவதால் - அகிம்சையை ஏற்பதால் பயன் என்ன? என்ற வினா எழுப்பப் பெறுகிறது.

குறிப்பிட்ட ஒரு நல்ல கொள்கை, அது எந்தக் கொள்கையாயினும் நடைமுறைக்கு வருதல் என்பது சற்றுக் கடினமானதுதான். தீயது விளைவது போல நன்மை அத்துணை விரைவில் விளைந்து விடுவதில்லை. எனது வீட்டில் கொசு இருக்கிறது என்பதற்காக அடுத்த வீட்டிலும் கொசு இருக்கிறது என்றோ, எனது வீட்டில் இல்லாததால் அடுத்த வீட்டிலும் கொசு இல்லை என்றோ திடீர் என முடிவு கட்டிவிடுவது கூடாது. அகிம்சையைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய - நடைமுறையில் கடைப்பிடிக்கக்கூடிய சூழ்நிலை இன்றைய உலகம் முழுமையும் மெல்ல மெல்லப் பரவி வருகின்றது. அணு ஆயுத சோதனைத்தடை, அணு ஆயுத உற்பத்தித் தடை போன்ற துாய நல்லுணர்வுகள் தலையெடுத்து வரும் காலம் இது. இந்த நேரத்தில் அகிம்சையை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற நன்மை மிகப் பெரியது.

பண்டைய நிலையில் அகிம்சையால் விளையும் பயன் அவ்வளவு பெரிதன்று. ஏனெனில் அன்றைய ஆயுதம் வாளும் ஈட்டியும் அம்பும்தான். அவற்றால் விளையும் பயன் தீமையைவிட மிகமிகக் குறைவு. அன்று ஒரு மனிதன் கையிலிருந்த வாளினால் ஒரு சிலரே இறந்துபட நேரிட்டது. இன்றோ ஒரு சிறு அணுகுண்டால் கோடிக்கணக்கான மக்கள் - ஏன் இந்த உலகமே அழிந்துவிடக்கூடும். எனவே இன்றையச் சூழ்நிலையில்தான் அகிம்சை நெறி அணு ஆயுத சோதனைத் தடை, அணு ஆயுத உற்பத்தியைக் குறைக்க நிகழும் கிளர்ச்சி - படைபலக் குறைப்பு முதலியன அகிம்சை நெறி வெற்றியடையத் தொடங்கியுள்ளமைக்கு அறிகுறியாகும். இவை யெல்லாம் அன்பு நெறியின் - அருள் நெறியின் - அகிம்சை நெறியின் வெற்றிகள்!