பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

405


தனிமனித வளர்ச்சி மிகவும் முக்கியமானது. தனிமனித உரிமை நசுக்கப்பட்டால் ஒரு சமுதாயம் வாழமுடியாது. எனவே தனிமனித உரிமை என்றும் நசுக்கப்படாது-நசுக்கப்பட விடக் கூடாது. சோஷலிச பாணி சமுதாயத்தில் தனிமனித உரிமை சாவதாகக் கருதக்கூடாது. மாறாகத் தனிமனித உரிமை காப்பாற்றப்படும்.

தனிமனித உரிமை நசுக்கப்பட வேண்டும் - பொசுக்கப்பட வேண்டும் - பறிக்கப்பட வேண்டும் என்பது நமது சோஷலிச சமுதாயத்தின் இலட்சியமன்று. தனிமனித உரிமை நசுக்கப்பட்டு விட்டால் - ஒடுக்கப்பட்டு விட்டால் - பிடுங்கப்பட்டு விட்டால் சமுதாயத்தில் ஒரு தேக்கம் - சூனியம் ஏற்பட்டுவிடும். தனிமனித ஆசைகள் - உணர்வுகள் தூண்டிவிடப்பட வேண்டும். இரண்டு சட்டைகள் போடுகிற இடத்தில் நான்கு சட்டைப் போட வேண்டும் என்ற ஆசை வருகிறது; அது தேசத்தின் மறுமலர்ச்சிக்கு அடையாளம்.

“ஏதோ சினிமா பார்த்து தகர டப்பாப் பாட்டுக் கேட்பதற்குப் பதிலாக வானொலி கேட்க வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது. அது வளர்ச்சியின் அடையாளம்” நம்முடைய நாட்டில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான் நமது இலட்சியம். இதனால் சமுதாய உரிமை வளர்கின்ற போது தனிமனித உரிமை அழிந்து போகாது. ஆனாலும் நாட்டுக்குப் பயன்படும் பணத்தைத் தனியொருவன் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவைப்பதைச் சமுதாயம் அனுமதிக்காது.

தனிமனிதனுடைய சிந்தனையுரிமையை - அறிவுரிமையை அரசு பிடுங்க முடியுமா? தனிமனிதனுடைய பேச்சுரிமைக்கு மரியாதை கொடுப்பது நமது சுதந்திர நாடுதானே! இங்கு சமுதாய உரிமைக்குக் கேடுதரும் தனி மனித உரிமை கட்டுப்படுத்தப்படும். சமுதாய உரிமைக்குக் கேடு தராத தனிமனித உரிமைகள் உயிரினும் இனிதாகப்