பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களுடன் கலந்து உறவாடித் தங்கள் உடலுழைப்பை அறிவியல் சார்ந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

அறிவுழைப்பாளிகளும் உடலுழைப்பாளிகளும் ஒன்று. சேர்ந்து உழைத்து உலகியலை நடத்தும் போதுதான் மனித குலம் ஒன்றுபடும்; அற்புதங்கள் நிகழும்.

நம்மிடத்தில், நம்முடைய சமுதாயத்தில், பல தீமைகளை அகற்ற உழைப்பு உதவி செய்யும். "சின்னச் சின்னக் கவலைகளால் அளிக்கப்படும் தொந்தரவு, குடித்தல், புகை பிடித்தல், காமாந்தகாரனாகத் திரிதல், வறுமையில் கிடந்து உழலுதல், அழுக்காறு வயப்பட்டுப் புழுங்குதல்;

“வறுமொழியாளருடன், வம்பப்பரத்தருடன் கூடித் திரிதல், கோள் சொல்லுதல், பயனில பேசுதல், சிறுசிறு கலகங்களைத் தூண்டி விடுதல் - செய்தல் முதலிய தீமைகள் உழைப்பால் விலகும்” என்பது வால்டேர் கருத்து. இன்றைய தீமைகளுக்கெல்லாம் அடிப்படை உழைப்பின்மையேயாம்.

மனித சமுதாயத்தின் பிணிகளையும், துயரங்களையும் போக்கக்கூடிய தனிச் சிறப்பான மருந்து உழைப்பேயாம். அந்த உழைப்பும் "உழைப்பு, உழைப்பு” என நேர்மையான உழைப்பாக இருக்க வேண்டும். உழைப்பதற்கு உரிய ஒவ்வொரு வினாடியும் விலை மதிப்புடையது.

அந்த நேரத்தில் அரட்டையடிப்பது, செய்தித்தாள்கள் படிப்பது, காரணமின்றி அங்குமிங்குமாகச் சுற்றுவது ஆகியன செய்யத் தகாதன. இந்த உலகத் தீமைகளுக்கு எல்லாம் மருந்து, கடின உழைப்பேயாம். இன்று "உழைப்பு நாள்கள்" பல. வீணாகின்றன. பொழுதெல்லாம் வீணாகின்றன.

முயற்சிக்கும் உழைப்புக்கும் சில தடைகள் வருவதும் உண்டு. முதலில் நிற்கும் பெரியதடை ஊழ். ஊழ் - விதி - வினை - தெய்வம் என்பன ஒரு பொருள் சொற்கள். நமது மக்களில் பலர் ஊழின்மீது அளவற்ற நம்பிக்கை வைத்து உழைக்காமலே வாழ்கின்றனர்.