பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சாதனைகள் செய்வதன் மூலம் புவியை நடத்துகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. குறைபாடுகளைக்களையும் நோக்கத்தைவிட குறைபாடுகளை நியாயப்படுத்தும் வகையில் சமாதானம் கூறிவிட்டு நழுவிவிடுபவர்களே இன்று மிகுதி.

இன்று எங்கும் கேட்கும் முழக்கொலி "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!", "ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” என்பவை. ஆனால் உண்மையில் நடப்பதோ, நாளும் சாதிச் சங்கங்களும் அவ்வழி கலகங்களும் தோன்றி வளர்ந்து வருகின்றன.

மத நிறுவனங்கள் அனுட்டானத்தைவிட, பிரச்சாரப் புயலில் சிக்கித் தவிக்கின்றன. நாடோ, ஊரோ, வீடோ இன்று ஒன்றாக - ஓருருவாகவில்லை. கிராமத்தின் எல்லையில் நம்மை வரவேற்பது பசுமையும், இலைகளும், பூக்களும் நிறைந்த மரங்கள் அல்ல. கட்சிக் கொடிகளே வரவேற்கின்றன.

உள் அமைப்பு ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் உத்தியாகக் கொள்ளாது தேக்கமடைந்ததால் ஏற்பட்ட கோப தாபங்களால் பிரசவிக்கப் பெற்றவைகளே இன்றுள்ள பெரும்பான்மையான கட்சிகள்.

மதவாதிகள் மட்டமா என்ன? தெருவுக்கு ஒரு கோயில்! சாதிக்கு ஒரு சாமி! இவை எல்லாமாக ஒன்று சேர்ந்து வாழ்க்கையில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; வளர்ச்சிக்குக் குந்தகம் செய்கின்றன; மாற்றங்களுக்குத் தடையாக உள்ளன.

அருமைப் பெரியோர்களே! இளைய பாரதத்தினரே! இந்தப் பாதையில்தான் நாம் தொடர்ந்து, செல்ல வேண்டுமா? வேண்டாம்! வேண்டாம்! வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய பாதையில் செல்ல அடியெடுத்து வைப்போம்! நடப்போம்! தொடர்ந்து நடப்போம்!