பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

423


ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!”
(புறம் - 191)

என்பது பிசிராந்தையார் பாடல்.

வீட்டில் பொருளாதார மேலாண்மை குடும்பத் தலைவியிடம் இருந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் பரிசில் பெற்றுவந்தார். வந்தபின் தமது மனைவியிடம் சொல்லுகின்றார், "வாழ்க்கைத் துணை நலமே! இதோ, குமணன் தந்த பரிசுப் பொருள்கள்! உனக்கு வேண்டியவர்களுக்குக் கொடு! உன்னால் விரும்பப்படுகிறவர்களுக்கும் கொடு ! உனது சுற்றத்தாருக்கும் கொடு ! நமது சுற்றத்தாருக்கும் கொடு! வேண்டியவர்கள் - வேண்டாதவர்கள் என்று பாராட்டாது அனைவருக்கும் கொடு! என்னைக் கேட்காமலும் கொடு! கலந்து ஆலோசனை செய்யாமலும் கொடு.! உன் விருப்பம் போலக் கொடு!" என்கிறார்.

ஆதலால், குடும்பத் தலைவிக்குக் குடும்பத்தில் பொருளாட்சி இருந்தது தெரிய வருகிறது. இன்றைய நிலை என்ன? ஒருசில குடும்பங்களில்தான் உள்ளன. வேலை பார்த்துச் சம்பாதிக்கும் மனைவிகடத் தான் ஈட்டிய பொருளை அல்லது அதில் ஒரு பகுதியைக் கூடத் தான் வைத்துக் கொள்ள முடியாத நிலை! இதுதான் நமது நாட்டுக் குடும்ப வாழ்க்கை நிலை. சங்க இலக்கியங்கள் மனைவியைக் குடும்பத் தலைவி என்றே கூறகின்றன. திருக்குறள் "வாழ்க்கைத் துணைநலம்” என்று சிறப்பிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பெண் அடிமைத்தனம் இல்லை. இன்று நாம் எங்கே போகிறோம்? பெண் சிசு கொலை, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி, வரதட்சணைக் கொடுமை என்று பெண்களுக்குக் கொடுமை செய்யும் வழியில் போகின்றோம்! இந்த நிலை மாறி மகளிர் போற்றும் தடத்தில் செல்ல வேண்டும்!