பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

263



இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

என்று கூறுகிறார். இந்த வேறுபாடு நீடிப்பதற்குக் காரணம் ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைப்பின்படி செயல்கள் தோன்றி, ஒவ்வொருவரிடத்தும் வளர்ந்து ஊழாக மாறுவதேயாம்.

மனிதனின் செயற்பாட்டுக்கு அடிப்படை அவனது சென்றகாலச் செயல்களின் விளைவாகிய ஊழேயாம். இழவூழ் வளர்ந்தமையின் காரணமாகத் தீமையைத் தீமையென்றுணரச் செய்யாமல் பேதைமைப்படுத்தும். இதன் காரணமாக நல்லவையாக இருப்பவையும் கூடத் தீமையாக மாறும். நல்லூழ் இருக்குமாயின் தீமையும் நன்மையாக மாறும்.

நல்லவை யெல்லாந் தீயவாந் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

என்பது குறள்.

ஊழ், உயிரை ஒட்டியிருக்கின்ற தத்துவம். உயிர் கடந்த காலச் செயல்முறைகளுக்கு ஏற்பப் பயன் பெற்று அனுபவிக்கும் இந்த முறையும் மரபும் வழி வழிப்பட்டதாகும். ஊழின்பாற் பட்டதல்லாத ஒன்று நாம் உரிமை கொண்டாடினாலும், நம்மிடம் தங்கிப் பயன் தராது.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

என்று கூறி இதனை விளக்குகிறது, குறள்.

அடுக்கிய கோடி செல்வம் பெற்றிருப்பினும் இன்புற்று வாழத் தெரியாதவர்களும் நிறையப் பேருண்டு. ஏன் இந்தக் குறை? என்று திருக்குறள் ஆராய்கிறது. முடிவாக,