பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ
தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து

என்பது குறள், மிகப்பெரிய மணிநெடுந்தேராக இருந்தாலும் அந்தத் தேரின் இனிய செலவுக்கு அச்சாணி தேவை. அதுபோல மாடமாளிகை, கூட கோபுரங்கள் மற்றும் பல்வேறு வகையான மேம்பட்ட உலகாயினும் உழவுத் தொழிலாகிய அச்சாணி இந்த உலகத்திற்கு இன்றியமையாதது.

தம்முடையதேவைகளைத் தாமே உழுது உற்பத்தி செய்து உண்டு வாழ்வோர், பிறரைத் தொழவேண்டிய அவசியம் இல்லாதவர்கள். அவர்களுக்கு இச்சை முகம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. உழவர் வாழ்க்கை தன்மானம் நிறைந்த தகவுடைய வாழ்க்கையாகிறது. ஆனால், இன்றோ உழவனுக்கும் நிலத்தின் உரிமைக்கும் நீண்ட இடைவெளியிருப்பதால், உழவனின் வாழ்க்கை இத்தகு சிறப்புடையதாக இல்லை. எனினும், உரிமையுடையோனுக்கும் உணவு தேவையாதலால், இவனது மானம் ஓரளவு காப்பாற்றப்படுகிறது. அதுவும் பெரிய அளவு நில உரிமை குவிந்துள்ள இடத்தில் இயலாமற் போகிற நிலைமையை எண்ணி வருந்த வேண்டியதிருக்கிறது.

ஆனாலும் விடுதலைக்குப் பிறகு நம்முடைய நாட்டுச் சுதந்திர அரசு உழவர் பெருங்குடியின் வாழ்க்கை நிலைத்து நின்று உயரப் பல்வேறு புதிய சட்டங்களைச் செய்தது. அதன்வழி ஓரளவு முன்னேற்றம் காணப்பெற்றிருக்கிறது. உழவுத்தொழில் சுதந்திரமான-தகுதியுடைய தொழில். ஆனால், மற்ற வாழ்க்கைத் துறைகளோ அப்படியல்ல. தொழுதலும் பின்செல்லலும் பிறதொழில்களோடு இணைப்புடையன. இதனை,