பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டுமா கேள்; ஏச வேண்டுமானால் ஏசு! பேச வேண்டுமானால் பேசு' என்று செய்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைத் திட்டியதுபோல ஒருவரும் திட்டியிருக்க மாட்டார்கள். ‘மகத்திற் புக்கதோர் சனி எனக்கானாய்’ என்றார். ஓரிடத்தில் ‘சனியனே’ என்று திட்டுவோமே, அதைப்போல இறைவனை ‘மகத்திற் புக்கதோர் சனி எனக்கானாய்’ என்று சொன்னார். என்ன தைரியமாக, ‘உன்னுடைய அலுவலகத்தை விட்டுச் சிறிது நேரம் வெளியில் போய் இருந்து கொள். நான் ஒரு சத்தியம் செய்யப் போகிறேன்; இந்த சத்தியத்தை உன் முன்னால் செய்தால் மிகவும் தவறு. எனவே சத்தியம் செய்யும் வரை சிறிது நேரம் வெளியில் போய் இரு’ என்று சொல்லுகிறார். காரணம் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள்! மனிதன் என்று சொன்னால் அவனுக்குச் சில ஆவல்கள் இருக்கின்றன; ஆர்வங்கள் இருக்கின்றன. அந்த ஆர்வங்களைத் தணிக்காமலும் அவனுடைய ஆன்மா ஈடேற முடியாது. தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற தாகம் இருக்குமானால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும். அவனுடைய தாகம் தீராதபோது ஆன்மாவை எப்படி ஈர்க்க முடியும்? ஆகவே தான் பட்டினத்தார், ‘வினைப்போகமே ஒரு வேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போதளவும் நில்லாது கண்டாய்’ என்றார். ஆகக் குறிக்கோள்வழி நமக்குச் சில துய்ப்புகள், மகிழ்வுகள் இருக்கின்றன. அவைகளை அடைகிற காலம்வரை இவனுடைய கற்பனை இருக்கும் என்று சொல்லக் கூடாது. கடவுளாகப் பார்த்தான்; அவன் எந்த வடிவத்தில் நினைத்தானோ, அந்த வடிவத்தில் சேர்ந்து விட்டான். பின்னாலே சிலபேர் கத்தி, சூலம் எல்லாம் வைத்திருப்பவனைக் காட்டேறி, முனீசுவரன் என்று வைத்து விட்டார்கள். அவர்கள் மனதில் அப்படி வந்து சேர்ந்து விட்டார்! பாவம்.