பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

125



பாரதி தொடர்ந்து பேசுகின்றான். "அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்" வாழ்ந்திடுதல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். இன்று பொருளாதார நெருக்கடிகளுக் காளாகிச் சட்ட ஒழுங்குகள் சீர்குலைந்திருக்கும் நிலையில் பாரதியின் இந்தக் கருத்து மாமருந்தாகும். சென்ற காலத்தவறுகள் நடந்தவையாகப் போகட்டும். கவலை வேண்டாம். ஆயினும் பாரதி நூற்றாண்டு விழாக் காலத்தில் பாரதியின் ஆணைப்படி புதுவிதி செய்வோமாக! எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்று நம்புவோமாக! நடத்துவோமாக!

பாரதி விரும்பிய பாரத சமுதாயம்

பாரதி, விடுதலைக் கவிஞன். பாரதி விரும்பிய விடுதலை அரசியல் விடுதலை மட்டுமன்று. பாரதியின் விடுதலை முழக்கம் ஒரு முழு விடுதலைப் புரட்சியேயாகும். ஆம்! அரசியல் விடுதலை மட்டுமே அரை வயிற்றுக்காரனுக்குச் சோறு தந்து விடுமா? தொழிற் புரட்சி ஏற்பட வேண்டும்; பொருளாதாரப் புரட்சி நடக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலட்சியம் நிறைவேறினால் தான் விடுதலை அர்த்தமுள்ளதாகும். இத்தகைய விடுதலையே பாரதியின் இலட்சியம்.

இருள், துன்பத்தின் சின்னம்; அடிமைத்தனத்தின் அடையாளம்; அறியாமையின் கூறு. இருளின் விளைவால் அடிமைத்தனம், வறுமை, புன்மையான ஆதிக்கங்கள், கலகங்கள், போர்கள் ஆகியன கூத்தாடும். ஆதலால், மனித குலத்தை வாழ்விக்க விரும்பும் கவிஞர்களெல்லாம் இருள் நீங்கி ஒளி வரவே பாடுவர். பொழுது விடிவது எப்போது? என்ற வினா புரட்சிக்குக் கட்டியம் கூறும் வினா! பொழுது விடிவது என்பது இரவு போய், பகல் வருவது என்பது மட்டுமல்ல. இன்னல்கள் நீங்கி இன்பம் வருவது என்பதுமாகும்.