62
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
"எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்!"
பாரதியார்
பாரதி ஒரு கவிஞன். கவிதைகள் மட்டும் பொழியத் தெரிந்த கவிஞனல்லன். பாரதி, திட்டமிடும் ஒரு சமுதாயப் பொருளியல் விஞ்ஞானி! பாரதி இந்த நாட்டின் முன்னேற்றத்திற்குப் பல செயல் திட்டங்களை எண்ணிச் செய்ய வேண்டும்-இல்லை, செய்வோம் என்று உறுதி பூணுகின்றான். பாரத நாட்டின் வடஎல்லை, இமயப் பனிமலை! இமயம், இந்த நாட்டு வளத்தின் ஊற்று. அதன் வளம் முழுவதையும் அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும். வெள்ளிப் பனிமலை மீது ஏறுதல் வீரம் செறிந்த முயற்சி. பாரத மக்கள் வீரம் செறிந்தவர்களாக விளங்க வேண்டும். இமயப் பணிமலை நமது எல்லைக்கோடு. அந்நியர் ஆக்கிரமிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாத்திடப் பனிமலை மீது சுற்றுதல் அவசியம். ஆதலால், "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்கிறான். பாரதியின் கனவு இன்று உண்மையாகி வருகிறது. இன்று, ஆண்களும் பெண்களும் அணி அணியாகப் பனிமலை ஏறும் சாதனையைச் செய்து வருகின்றனர்.
மலைக்கு எதிர் கடல்! மலை உயரமானது; கடல் ஆழமானது; அகலமானது. பாரத நாடு மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப் பெற்ற நாடு இக்கடலில் உள்ள செல்வம் அளப்பிலாதது. கிழக்குக் கடலில் முத்து! மேற்குக் கடலில் எண்ணெய் வளம்! இவைகளையெல்லாம் கண்டு அனுபவத்திற்குக் கொண்டு வரவேண்டும். அது மட்டுமா? கடல் சூழ்ந்த நாடாதலால், கடல் வழிப் படையெடுப்பு வராமல் பாதுகாக்கக் கடல்களில் காவல் தேவை. இது பாரதியின் திட்டம். இன்று விசாகப் பட்டினத்தில் கப்பல்