பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இறைவன் செருமல் ஒலி செய்கிறான். அப்போதும் நான், “நான்” தான்! அசைந்து கொடுக்கவில்லை. நான் என்ன சாமான்யனா? தலை நிறைய மூளை இருக்கிறது; அறிவு இருக்கிறது. பெற்றிருப்பது அறிவா? அறியாமையா? அது போகப் போகத் தெரியும்! சாயம், வெளுத்துப் போகக் கூடியதுதான். ஆயினும் ஆணவம் ஆட்டிப் படைக்கிறது! தலையால் நடந்தேன்! அம்மையார் நடந்த நடையல்ல! அது தலைக்குச் செய்த நடை! அம்மையார் நடை தவம் செய்த தவம்! ஆனால், நான் நடந்ததோ தருக்கி நடந்த நடை! எனக்குத் துணை எது? வினைதான் துணை! வினை பெருக்கி வினையால் அழியும் அவலத்திற்கு ஏது மருந்து? முற்றாகத் தற்கொலைக்குச் சமம்!

வினை செய்தல் உயிரியற்கை! மனம், உடல், வாக்கால் இடையறாது வினை செய்தலே உயிரியற்கை. வினை செய்தலும் வேண்டும். வினை செய்தலைத் தவிர்த்தலும் இயலாது; கூடாது. உயிரியற்றும் வினை உயிர்க்கு மருந்தாக அமைதல் வேண்டும். தண்ணீரால் உடலைக் கழுவுதலும் அவசியம். ஆயினும் உடன் துடைத்தலும் அவசியம். அதுபோல வினை செய்தலே உயிர் வாழ்க்கை; வினை செய்தலே துன்ப நீக்கத்திற்கு மருந்து. எப்போது வினை செய்தல் துன்பமாகிறது? எப்போது மருந்தாகிறது? வினை செய்தலைத் தவமாகக் கொண்டால் துன்பம் இல்லை; துயரில்லை. வினை செய்தலை வாணிகமாக்கக் கூடாது. அற விலை வாணிகமும் தீதே! வினை செய்தல் வழி, செருக்குக் கொள்ளுதல் ஆகாது. புகழ் வேட்டலும் கூடாது. “பொன் வேண்டேன்; புகழ் வேண்டேன்” என்பது மாணிக்கவாசகர் வாக்கு. “வீடும் வேண்டா விரலின் விளங்கினார்” என்பது சேக்கிழார் வாக்கு. திருவாசகம் முழுதும் பாழ்த்த பிறப்புறுத் தலை நோக்கமாகவுடையது! அதுவும் வீடுபேறு கருதியல்ல! கூத்துடையானைப் பாடிக் களிப்புறுதலுக்கேயாம். என்றும் இறைவனுக்கு அடிமைத் தொண்டு செய்தலுக்கேயாம்.