பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

181


திருநீறு. சிவநெறியைச் சார்ந்தலுக்குத் திருநீறணிதலே முதற் சாதனம்.

என்னை ஆண்டிட்டு என்னையும் தன்
கண்ண வெண்ணீ றணிவித்துத்
தூயநெறியே சேரும் வண்ணம்

என்ற திருவாசக வரிகளையும் எண்ணிக் கொள்க. திருநாவுக்கரசருக்கு, திலகவதியார் “திருவாளன் திருநீறு” வழங்கித்தான் சைவத்தில் சேர்த்தார். ஆன்மாக்கள் திருநீறு அணிந்தால் அவற்றின் வினை நீங்கும்; பாவமும் அகலும்; அமர நிலையும் அருளது நிலையும் எய்தலாம்! ஆனால் இறைவன் திருமேனியில் திருநீறு ஏன்? தாய்ப்பாலுண்ணும் குழந்தைக்குத் தாய் மருந்து கொடுப்பதில்லை. குழந்தைக்குப் பத்தியமும் இல்லை. குழந்தையின் நோய்க்குத் தாயே மருந்துண்கிறாள்; பத்தியம் பிடிக்கிறாள். அதுபோல இறைவன் தன்னைத் தொழுது எழும் பக்தர்களுடைய வினை வளம் கெடத் திருநீறு அணிகின்றான் என்று திருக்கோவையார் கூறும்.

“மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினார்” என்றார் அடிகள். பொய், கொடுமையினும் கொடுமையானது. அதனாலன்றோ தமிழ்மறை.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”

(297)

என்று கூறியது! பொய்- இல்லாதது. புனைவுகளை ஒட்டிக்கொண்டு பொய் வரும். மாணிக்கவாசகர்,

“யானும் பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே!”