60 குறிஞ்சிமலர் பசிக்கிறது' என்று ஓடிவந்து வாயிற்படியிலேயே பூரணியின் காலைக் கட்டிக் கொண்டாள். வாடிப் போன சூரியகாந்திப்பூ மாதிரிக் குழந்தையின் முகத்தில் பசிச் சோர்வு தென்பட்டது. நாவுக்கரசும் சிறிய தம்பி சம்பந்தனின் படுக்கையருகே துவண்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். நன்றாக இரசம் பூசிய கண்ணாடியில் எதுவும் தெளிவாகத் தெரிகிற மாதிரி இளம் முகங்களில் பசிதான் எவ்வளவு விளக்கமாகத் தெரிகிறது மூப்பில் அவஸ்தைகள் பயின்று பழகி மரத்துப் போவதால் உணர்வைத் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடிகிறது. இளமையில் அப்படி மறைக்க முடிவதில்லை.
ஒட்டலில் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்து மூன்று பேருக்கும் தனித்தனி இலைகளில் வைத்தாள்.
‘'நீ சாப்பிடலியா, அக்கா?" என்று நாவுக்கரசு தனக்கு முன் இலையிலிருந்ததைத் தொடாமல் பூரணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான்.
சாப்பிடாயிற்று! கமலா வீட்டுக்குப் போயிருந்தேன். விடமாட்டேன் என்று பிடிவாதமாக வற்புறுத்தினாள்; அங்கே சாப்பிடும்படி நேர்ந்து விட்டது; நீங்கள் சாப்பிடுங்கள்."
பொய்யைப் போல் சமயத்தில் உதவிசெய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.
'உன் முகத்தைப் பார்த்தால் சாப்பிட்ட மாதிரித் தெரியலையே அக்கா"
'போடா அதிகப் பிரசங்கி, சாப்பிட்ட மாதிரித் தெரிகிறதுக்கு முகத்தில் 'சாப்பிட்டாயிற்று' என்று எழுதி ஒட்டியிருக்க வேண்டுமோ?" .
- இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. அந்தச் சிரிப்பினால் அக்காவின் மேல் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இலையிலிருந்ததை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுடைய இலையில் உணவுப் பொருள் குறையக் குறைய பூரணியின் மனத்திலும் முகத்திலும் ஏதோ நிறைந்து மலர்ந்தது.
'அக்கா தபால்காரர் கொடுத்து விட்டுப் போனார் என்று சில கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் நாவுக்கரசு.