தமிழ்ப் பேரறிஞர் ரசிகமணி
திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார்
அவர்கள் கருத்து
அருமை நண்பர் திரிகூடசுந்தரம் அவர்களுக்கு, வணக்கம்.
கேள்வியும் பதிலும் என்ற புத்தகம் கிடைத்தது.
எந்த வீட்டுக்குப் போனலும் ஈவிரக்கம் அற்றவர்கள் எழுதிய பாட புஸ்தகங்களைப் பார்க்கிறேன்; கசாப்புக் கடைக்குப்போனால் நமக்கு எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது, பாட புஸ்தகங்களையும் பச்சைக் குழந்தைகளையும் பார்க்கும்போது. குழந்தைகள் அறிவுக்கான ஆகாரம் எங்கே என்று நாடுகிறார்கள். அதைக் கொடுப்பார் யாரும் இல்லை. அதற்குப் பதிலாகப் பாடப் புஸ்தகங்களையும் ஆசிரியர்களையும் தான் கொடுக்கிறார்கள்.
இது விஷயமாகப் பெற்றோரும் ஒன்றும் செய்கிறதில்லை. என்ன செய்கிறது! என்ன செய்கிறது! என்று தான் கையை நெறித்துக்கொண்டு சொல்கிறர்கள்.
ஆசிரியர்களது ஆதிக்கம் வளர்ந்து கொண்டே போகிறது.
என்றைக்குமே வேண்டாத கணக்குகள், கவிகள் சரித்திரப் பொய்கள் இவைகளைக் கொண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் உள்ளத்தைப் பயமுறுத்திக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
வைசூரி குத்துதல் எவ்வளவு வியாபகமோ அதற்கு மேலாகவே "கல்வி புகட்டல்" வியாபகமாய் இருக்கிறது. அப்படி சர்வ வியாபகமாக இருக்கிற விஷயத்தை நிவர்த்திக்கிறது என்பது முடியாத காரியம்.