உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


26. கிளி

தேமலர்ச் சோலையிலே - வாசமெழு
     தென்றல் உலாவையிலே,
மாமண மங்கையைப்போல் - பெரிது
     மகிழ்ந்துநீ தங்கினையோ? 1

பச்சிலையும் கனியும் - நிறைந்து
     படர்ந்து வளர் ஆலின்
உச்சியிற் சென்றிருந்தால் - எப்படியான்
     உன்னையும் கண்டிடுவேன்? 2

நாடும் என் உள்ளத்திலே - குடிபுகும்
     நாயகி கையமர்ந்து,
பாடி அமுதளிக்கும் - அழகிய
     பைங்கிளி நீயலவோ? 3

பூனைகள் இங்குவரா - வேடர்தம்
     பொறியின் பயமும் இல்லை;
யானுனைக் காத்திடுவேன் - இறங்கி நீ
     என்கையில் வந்திடாயோ? 4

வட்டமா யுன்கழுத்தில் - ஒருநாளும்
     வாடாத ஆரமதை
இட்டவர் ஆரடியோ? - எனக்கும்
     இயம்புவையோ? கிளியே! 5