பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

கெடிலக்கரை நாகரிகம்



முண்டீச்சுரம் (கிராமம்)

முண்டீச்சுரம் எனத் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் இப்போது கிராமம் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. மக்கள் தொகை 1,650. திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே ஒரு கி.மீ. தொலைவிலும் - திருவெண்ணெய் நல்லூர் ஊருக்குக் கிழக்கே மூன்று கி.மீ. தொலைவிலுமாக மலட்டாற்றின் தென்கரையில் இக்கிராமம் இருக்கிறது. இவ்வூர்க்குத் தென் மேற்கே பத்து கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதை வழியே போகும் பேருந்து வண்டியில் பயணம் செய்யின் இவ்வூர்ச் சிவன் கோயிலின் வடக்கு மதிற்புறமாக இறங்கலாம். கோயில் ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது.

முண்டீச்சுரம் எனப்படும் கிராமம் நாவுக்கரசரின் பாடல் பெற்ற பழம்பதி. சிவன் பெயர்: முண்டீசுரர், சிவலோகநாதர், அம்மன் பெயர். கானார் குழலி. இங்கே முதற் பராந்தகனது கல்வெட்டு உட்படப் பல கல்வெட்டுகள் உள்ளன. முண்டிச்சுரம் கோயில் முதல் இராசாதித்த சோழனால் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருத்திக் கட்டப்பட்டது.

சேந்தமங்கலம்

அன்று மன்னர் சிலரின் தலைநகராக இருந்ததும் இன்று திருநாவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் உள்ளதும் ஆகிய சேந்தமங்கலம், சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையில் சென்னைக்கு 183 ஆம் கி.மீட்டரில் (114 ஆம் மைலில்) கெடிலத்தின் தென்கரைக்கு அண்மையில் உள்ளது. இவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 30 கி.மீ தொலைவிலும் - விழுப்புரத்திற்கு (மேற்கு சாய்ந்த) தெற்கே 25 கி.மீ தொலைவிலும் பண்ணுருட்டிக்கு (தெற்கு சாய்ந்த) மேற்கே 20 கி.மீ தொலைவிலும் - உளுந்தூர்ப் பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ தொலைவிலுமாக இருக்கிறது. சேந்தமங்கலத்திற்கும் திருநாவலூருக்கும் நடுவே கெடிலம் ஒடுகிறது. ஆற்றின் தென்கரையில் சேந்தமங்கலமும் வடகரையில் திருநாவலூரும் உள்ளன. குறுக்கு வழியாக நடந்து வந்தால் இரண்டு ஊர்கட்கும் இடையேயுள்ள தொலைவு 2 கி.மீ. ஆகும்; நல்ல சாலை வழியாக வந்தால் 4 கி.மீ ஆகும். சேந்தமங்கலமும் திருநாவலூரும் ஒன்றுக்கொன்று முறையே வடகிழக்கும் தென்மேற்குமாகச் சாய்ந்து கெடிலத்தின் எதிர் - எதிர்க் கரைகளில் உள்ளன. சேந்தமங்கலத்தின் மக்கள் தொகை 5,600.