பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

61


தினால் இயற்கையாகத் திசை மாறியது; ஆனால், திருப்பாதிரிப் புலியூர்ப் புராண ஆசிரியர், மணிவாசகருக்காக மாறியதாகச் செயற்கையாக ஒரு காரணம் கற்பித்து நிலைமையைச் சரிக்கட்ட முயன்றுள்ளனர்; இதுபோலப் புனைந்துரைப்பது புராணங்களின் வாடிக்கை’ என்று கூறி இக்காரணத்தைத் தட்டிக் கழிப்பர்.

இவ்விரு திறத்தாரின் கொள்கை முரண்பாடு எவ்வாறிருப்பினும், இவண் நமக்கு விளங்கும் உண்மையாவது: திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் எழுதிய தொல்காப்பியத் தேவரின் காலத்தில் நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் எழுதிய இலக்கணம் சிதம்பரநாத முனிவரின் காலத்தில் நகருக்கு வடக்கே ஓடியிருக்கிறது என்பதாம். அங்ஙனமெனில், கெடிலத்தின் வரலாறு கண்ட இத்திசை மாற்றம் நடந்த காலம் எது?- என ஆராய வேண்டும்.

திருநாவுக்கரசர் கரையேறியபோது கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஓடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த செய்தி. அதற்குப் பல சான்றுகளும் முன்பு காட்டப்பட்டுள்ளன. நாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் பலர்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. எனவே, அதன் பிறகுதான் கெடிலத்தின் திசைமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அடுத்துத் தொல்காப்பியத் தேவரின் காலத்தை ஆராய வேண்டும். தொல்காப்பியத் தேவர் இரட்டையர்களால் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளார். இரட்டையர்கள், திருப்பாதிரிப் புலியூர் சென்றிருந்தபோது, அவ்வூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் பாடித் தருமாறு அவ்வூரார் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள், ‘சிவன் மேல் கலம்பகம் பாடவேண்டுமென்றால் தொல் காப்பியத் தேவர் பாடவேண்டும்; நாம் பாடுவது இறைவனுக்கு ஏறுமோ?” என்று கூறியுள்ளார்கள். இதனை,

'தொல்காப்பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து
பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் றீந்தார்க்கே'

என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இதிலிருந்து இரட்டையர் காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்பது தெளிவு, அங்ஙனமெனில், இரட்டையர் காலம் எது?