'அநுமார்' சாமியார்
ஆலம் விழுதுபோல் சடை சடையாகத் தொங்கும் பரட்டைத் தலைமயிர். கையிலே ஒரு பை; இடுப்பிலே காவி வேட்டி. தாடியும் புருவமும் போக நெற்றியிலே உள்ள இடைவெளி முழுதையும் பட்டை நாமம் மூடி மறைத்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஓர் ஆசாமியை எங்கோ பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவர் தான் அநுமார் சாமியார்!
அவருக்கு என்ன வயசோ, எந்த ஊரோ, என்ன பேரோ எங்கே பிறந்து எங்கு வளர்ந்தவரோ?—யாருக்குமே எந்த விவரமுமே தெரியாது.
அவர் தெருவில் நடந்து சென்றால், "டேய், அநுமார் சாமியாருடா!" என்று பத்துப் பிள்ளைகளாவது அவர் பின்னோடு நடந்து செல்வார்கள்.
அநுமார் சாமியார் பாட்டு பாடிக்கொண்டே நடப்பார். ஆனால், பிச்சை எடுக்கமாட்டார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரரைப்போல் காணப்படுவார். ஆனால், அவர் பைத்தியக்காரர் அல்ல.
ஊர் ஊராகப் போய், சுவர் சுவராக அநுமார் படம் எழுதுவதுதான் அவருடைய வேலை, லட்சியம் எல்லாம். அவருடைய பையில் என்னென்னவோ இருக்கும். காவிக் கற்கள், உற்சவ நோட்டீசுகள், ஒரு பித்தளைச் செம்பு, கிழிசல்