22
"சரி சார், இப்ப எதுக்குக் கூப்பிட்டீங்க?"
"திருவல்லிக்கேணியிலே ஒரு வீடு காலியாயிருக்காம். கொஞ்சம் போய் அதை விசாரிச்சுட்டு வறயா?"
"அந்த வீட்டுக்காரர் இல்லாட்டி...?"
"திரும்பி வந்துடு."
"அதுக்கு ஏன் சார், போவணும்?"
அந்த ஆபீசில் மானேஜர்முதல், சின்ன குமாஸ்தா வரை எல்லோருக்கும் ஆறுமுகந்தான் அட்டெண்டர்.காலையில் பத்தரை மணிக்கு ஆபீசுக்கு வருவான். அவனுக்கென்று ஓர் இருட்டறை உண்டு. அங்கே ஆபீஸ் பைல்களெல்லாம் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த பைல் கட்டுகளுக்கிடையில் ஒரு ஸ்டூலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிடுவான். யார் மணி அடித்தாலும் வரமாட்டான்.
"ஆறுமுகம், உன்னை எத்தனை தடவை கூப்பிடறது?"
"எதுக்கு சார், கூப்பிட்டீங்க?"
"உடனே போய் திருச்சிக்கு ஒரு பஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிட்டு வா, போ!" என்பார் ஹெட்கிளார்க்.
"ஆபீஸ் விஷயமாப் போறீங்களா, சார்?"
"உனக்கெதுக்குடா இந்த அக்கப்போரெல்லாம்? நீ போய் டிக்கெட் வாங்கிட்டு வாயேன்."
"அதுக்குக் கேக்கலே, சார்! உங்க நன்மைக்குத்தான் கேட்டேன். சொந்த டிரிப்பாயிருந்தால் எதுக்கு அவ்வளவு பணம் செலவழிக்கிறீங்க? குழந்தை குட்டிக்காரராச்சே!"
"உன் 'அட்வைஸ்' எனக்கு வேண்டாம். முதல்லே நீ போய் டிக்கெட்டை வாங்கிட்டு வரப்போறயா, இல்லையா?"
"அதான் சொல்லிட்டீங்களே, செஞ்சுடப்போறேனே?"
"பின்னே என் நிக்கறே?"