பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

இவ்வாறு பாலைபாடிய பெருங்கடுங்கோவின் செய்யுட்களில் பல உண்மைகளையும் அழகுகளையுங் இனிமையையும் கண்டு மகிழலாம். இவர் போர் செய்திருக்கிறார் என்றும் அப்போரில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் பேய்மகள் இளவெயினியார் இவர்மேல் பாடிய செய்யுளினால் அறிகிறோம்.

பேய்மகள் இளவெயினி

பேய் என்பது இவருடைய பெயர். பேய் பூதம் என்னும் பெயர்கள் சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் தெய்வங்களின் பெயராக வழங்கி வந்தன. பேயாழ்வார் பூதத்தாழ்வார் என்னும் பெயர்களைக் காண்க. எயினி என்பதனாலே இவர் எயினர் (வேடர்) குலத்துப் பெண்மணி என்று தெரிகிறார். இவர் சிறந்த புலவர். பெரும்புலவரும் அரசருமாக இருந்த பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடி இவர் அவரிடம் பரிசு பெற்றார். இவர் பாடிய பாடல் புறநானூறு 11-ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யளில் இவர் பாலை பாடிய பெருங் கடுங்கோவை,

“விண்பொரு புகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும் ம,
வெப்புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே”

என்று கூறுகிறார்.

இவரும் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் கொங்கு நாட்டில் சம காலத்தில் இருந்தவர்கள் என்பது தெரிகின்றது.

பொன்முடியார்

கொங்கு நாட்டுப் புலவராகிய இவர் சேலம் மாவட்டத்துத் தகடூர் நாட்டைச் சேர்ந்த பொன்முடி என்னும் ஊரினர்.