— 40 —
‘நம்முடைய மக்களிடையே இருந்துவரும் மூட நம்பிக்கைகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களில் ஏற்படும் தடைகளுக்கும் எல்லையேயில்லை. இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான பகுதி யாதெனில், எல்லாச் செயல்களுக்கும் நாள், நட்சத்திரம், லக்கினம் முதலிய பார்த்தல். க்ஷவரம் செய்து கொள்வதற்குக் கூட நம்மவர் மாதப் பொருத்தம், பட்சப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாள் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்திற்குக்கூட இந்தப் பழக்கம் என்றால், இனி கலியாணம், சடங்கு, வியாபாரம், யாத்திரை, விவசாயத் துவக்கம் முதலிய பல்லாயிரத் துறைகளிலே நம்மவர் மேற்படி பொருத்தம் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும், பொருள் கஷ்டத்திற்கும் அளவே இல்லை.
சகுனம் பார்க்கும் வழக்கமும் , செயல்களுக்குப் பெருந்தடையாக இருந்துவருகிறது. இதில் சேரும் அழிவுகளை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் காரிய நஷ்டம் மாத்திரமே உண்டாகிறது. நாள் பொருத்தம், லக்கினப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, காரியக் கெடுதல் மட்டுமன்றி, சோதிடர்களுக்காக வேறு பொருள் செலவாகிறது.
காலம் பண விலையுடையது என்பது ஆங்கிலப் பழமொழி. இது நம்மவருக்குத் தெரிவதில்லை. நேரம் வீணாகுமாயின், அதனால் பண லாபமும் கிடைக்காமல் போகும்.
பி. ஏ., எம். ஏ., பரீட்சைகளில் தேறி, வக்கீல்களாகவும், எஞ்சினீயர்களாகவும், பிற உத்தியோகஸ்தர்களாக,