பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கற்றாழைமடலில் இரண்டு ஓரங்களிலும் ரம்பம் போல முள் இருக்கும். அதன் நுனியிலே நீண்ட கூர்மையான பெரிய முள் ஒன்றும் இருக்கும். தங்கமணி அந்த நீண்ட முள்ளைத் தனியாக வெட்டி எடுத்து வைத்துக்கொண்டான். பிறகு, கற்றாழைமடலில் இரண்டு ஓரங்களிலுமுள்ள ரம்பமுட்களைக் கத்தியால் சீவிக் களைந்துவிட்டு, ஓலைச் சுவடியைப் போல அந்த மடலை இரண்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொண்டான். பழங்காலத்திலே எழுதுவதற்குப் பனை ஓலை பயன்பட்டது. எழுத்தாணியைக்கொண்டு அதில் எழுதினார்கள். தங்கமணி கற்றாழையில் நீண்ட முள்ளை எழுத்தாணி போலப் பயன்படுத்திக் கற்றாழை மடலில் கீழ்க்கண்ட கடிதம் எழுதலானான்.

அன்புள்ள அப்பாவிற்கும் அம்மாவிற்கும்,

எங்கள் வணக்கம். இக்கடிதம் உங்களுக்குக் கிடைக்கும்போது நாங்கள் மூவரும் பரிசலில் ஏறி
ஆற்றின் மறுகரை ஓரமாக வெள்ளத்தோடு போய்க் கொண்டிருப்போம். பிறகு, கரையில் இறங்கி, காட்டிற்குள் நுழைந்து போவோம். காடு எங்கு முடிகிறது என்று தெரியாது. வீர்சிங்தான் கொல்லி மலைக்குள்ளன். அதை நாங்கள் தெரிந்துகொண்டதால் எங்களை ஆற்றின் மறுகரையில் உள்ள காட்டில் அவன் வைத்திருக்கிறான். ஆனால், தாழிவயிறன் தூங்கும்போது தப்பிப் போக போகிறோம். அந்தக் குள்ளனைப்பற்றிப் போலீசுக்குத் தகவல் கொடுங்கள். எங்கள் உதவிக்குப் போலீஸ் படையுடன் ஒரு பரிசலில் வரக் கோருகிறோம். நாங்கள் தைரியமாய் இருக்கிறோம்.
தங்கள் அன்புள்ள,
தங்கமணி.

கற்றாழைமடல் நல்ல தடிப்பாக இருக்கும். அதனால் அதில் எழுவது எளிதாக இருந்தது. ஆனால் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டியிருந்ததால் சிறிய கடிதமானாலும் இரண்டு துண்டுகளில் எழுத வேண்டியதாயிற்று. அதை எழுதி முடித்து, ஒரு பக்கத்தில் மறைத்து வைத்தான் தங்கமணி.