104
மற்றவர்கள், நமது கொள்கையைத் தூற்றும் போதாகிலும், ஒரு விவரமும் புரியவில்லையே இவர்களுக்கு என்று நமக்கு ஆயாசம் ஏற்படும், புதுக் கட்சியார் பேசும் போது, அப்படியா? எல்லாம் தெரியும் இவருக்கு; நாடு அறியச் சொன்னவர்தானே; மாற்றார் மருளப் பேசினவர்தானே; விவரம் அறியாமலா பேசுகிறார்; அறிந்ததை மறைத்துக் கொண்டு பேசுகிறார்—மெத்தக் கஷ்டப்படுகிறார் என்பதே கூட அல்லவா, நமக்குப் புரிகிறது, புரியும் போது புன்னகை வருமேதவிர, புருவத்தை நெரிக்கவா தோன்றும்!
ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால், தம்பி! சென்னைக் கூட்டத்திலே, ஏசல் கேட்டு எரிச்சல் கொண்டவக்கள், பூசல் கிளம்பிவிடுமோ என்று எண்ணத்தக்க விதத்தில், கலகம் விளைவிக்க முற்பட்டனர் என்று இதழ்களில் கண்டேன்; அது மிக மிகத் தவறான போக்கு; அருவருக்கத் தக்கது; கண்டிக்கப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இதனை எழுதுகிறேன்.
ஒன்று சொல்வேன், நம்மைப் பிறர் இகழக் கேட்டும், பதறாது இருக்கும் போக்கை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை. நமக்கு நமது கொள்கையிலே அசைக்க முடியாத நம்பிக்கை! ஆராய்ந்து பார்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்றால், அந்தக் கொள்கையை எவர் கேவலப் படுத்திப் பேசினாலும், நமக்கு என்ன நட்டம்? ஏன் நாம் எரிச்சலடைய வேண்டும்?
கொள்கைப் பற்று என்ன, கீழே வீசினால் உடைந்து தூளாகி விடக்கூடிய, கண்ணாடிப் பாத்திரமா!'
இல்லையே—அது நமது குருதியில் கலந்து விட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா, ஒழித்து விட முடியும்? கண்டித்து விடுவதினாலா அழித்து விட முடியும்?