உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

உடைக்கும் சொல்லரசா ? அன்றி, மண் பிசையும் மன்னரா? எவர் திட்டம் இட்டவர்கள்? இளங்கோவா, கடுங்கோவா? குழி தோண்டி நின்றவர்கள், கூலி மிகப் பெற்றனரோ? கழி வாங்கச் சென்றவர்கள், கணக்குக் காட்டினரோ, சரியாக? செம்பியன் எனும் உங்கள் தோழன் செப்பினனாம், மற்றவர் மரப் பொம்மை, நானே மாமேதை! என் திறமே, இவ்வில்லம்!! என்றெல்லாம், அறிவீரா? ஏன் அந்த ஆணவம், என்று கேட்டுக் கொதித்தானாம், இரும்பொறையன், உண்மையா? என்னவோ, பிள்ளைகளா! எப்படியோ ஒரு வழியாய், இல்லம் அமைத்தீர்கள்! இனித்தான் இருக்கிறது, உமக்கு இன்னல் அடுக்கடுக்காய்!! இடம் பிடிக்க முனைவோர்கள், இடித்துக் கொள்வரன்றோ! என்னால் இது என்பதனால், எனக்கே எல்லாமென்று, எவனேனும் எக்காளம் எழுப்பிடலாமன்றோ! நான் எழுப்பியது இந்தச் சுவர்—இதை நானே இடித்திடுவேன் என்று இறுமாப்பாளன், எடுத்திடுவான் கடப்பாரை!! ஆன செலவு அதிகம் காட்டி அடித்தான் இலாபம் இவன் என்று, ஒருவன் மற்றொருவன்மீது உமிழ்திடுவான் கோபத்தை! கலாம் விளையும் இல்லத்தில், கண்டவர் ஏசிடுவார்! கார் தந்த நீர்த்துளியால் கலம் நெல் விளைவதுண்டு—கருத்தறியாதார் வயலுக்கு உரியரென்றால், களமன்றோ களமாகும்!! என்ன நேரிடுமோ? எத்தனை நாள் இவ்வாழ்வோ? எனக்கென்னவோ இஃது நீடித்த இன்பம் எனத் தோன்றிடவே இல்லை, சொன்னேன். கூடி வாழ்ந்திடும் குணம் கொண்டோர் என்று இன்று கூறுகின்றீர்; கேட்கின்றேன்; ஆயின் குமுறும் உள்ளத்தான், குறை காணும் எண்ணத்தான், குலவி இருக்கின்றான்; ஓர் நாள் குத்திக் குடலெடுக்கத் துடிக்கின்றான்! அறிந்ததை அறைந்தேன்; ஆசீர்வாதம், வாழ்க!—என்று பெரியவர்கள் சில பேர்கள் பேசினார், இல்லம் கண்டு. கட்டி முடித்திட்ட களிப்பதனில் மூழ்கியவர், கலகமூட்டும் பேச்சுக்குக் காதும் கொடுக்கவில்லை;