பக்கம்:கோயில் மணி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி

ங்கே பார்த்தாலும் நசநச என்று ஈரம். ஐப்பசி அடைமழை என்பது சரியாக இருக்கிறது. வீதியில் நடந்து செல்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. ஈசுவரன் கோயிலுக்குப் போகும் கூட்டம் குறைவு. ஆனால், முருக முதலியார் சரியாகச் சந்தியா காலத்துக்குப் போகாமல் இருக்க மாட்டார். சூரியன் மலைவாயில் விழும் நேரத்தில் தரிசனம் செய்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டு என்று யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை அவர் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டார்.

ஊரில் இரண்டு கோயில்கள் உண்டு: ஒன்று சுப்பிரமணிய சுவாமி கோயில்; மற்றொன்று சிவன் கோயில். சிவன் கோயில் பெரிது; சுப்பிரமணிய சுவாமி கோயில் அவ்வளவு பெரிதன்று. ஊரின் எல்லையில் இருக்கிறது முருகன் கோயில். ஊரைச் சார்ந்து இருக்கிறது சிவன் கோயில். முருகன் கோயிலுக்குப் போகிறவர்களுக்குப் பக்தி அதிகம் என்று தான் சொல்லவேண்டும். மழையானாலும், வெயிலானாலும் அத்தனை தூரம் நடந்து செல்வதற்கு எல்லோருக்கும் சுறுசுறுப்பு வருமா?

முருக முதலியார் இரண்டு கோயில்களுக்கும் போகிறவர். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சஷ்டி, கார்த்திகைகளில் முருகன் கோயிலுக்குப் போவார். மற்ற நாட்களில் சிவன் கோயிலுக்குப் போவார். எங்கே போனாலும் சாயங்காலப் பூசைக்குத்தான் போவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/7&oldid=1382727" இலிருந்து மீள்விக்கப்பட்டது