பக்கம்:கோவூர் கிழார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கின்றன. வயல்களில் எங்கே பார்த்தாலும் நெல்லும் கரும்பும். கரும்பின் பாத்திகளில் வெட்டும் பருவத்தைக் காட்டும் பூவோடு அவை நிற்கின்றன. முல்லை நிலத்தில் பசும் புல்லை அருந்தும் பசு நிரைகள் இருக்கின்றன. அவற்றிற்குக் காவலாக விற்படையையுடையோர் தங்கும் சிறிய அரண்கள் அங்கங்கே உள்ளன. கடற்கரையில் புன்னை மரத்தின்மேல் ஏறி அதன் கிளையில் உட்கார்ந்துகொண்டு அந்நிலத்து வாழ்வார் காற்றினால் தள்ளப்பெற்று வரும் கப்பல்களை எண்ணுகிறார்கள். கழிப் பக்கத்தில் உப்பை விளைவித்து அதைக் குவியல் குவியலாகக் குவித்து எடுத்துச் சென்று மலையுள்ள பகுதிகளில் மக்கள் விற்கிறார்கள்.

சோழ நாட்டுச் சிறப்பை இப்படி வருணித்தார் புலவர்பிரான் கோவூர் கிழார். கிள்ளிவளவனுடைய வீரச் சிறப்பையும் சில பாடல்களில் எடுத்துரைத்தார். இந்தப் பாடல்கள் அவனுடைய பெயரை இலக்கியத்தில் பதித்து அவனுடைய புகழை இன்றளவும் தாங்கி நிற்கின்றன.

இவ்வாறு பல காலம் சோழ மன்னர்களுக்கு உசாத் துணைவராகவும் அவைக்களப் புலவராகவும் வாழ்ந்த கோவூர் கிழார் தமக்கும் தம் நாட்டுக்கும் தம்மைச் சார்ந்தாருக்கும் நன்மையை உண்டாக்கினார். பகைத்த மன்னரைப் பகை நீங்கி ஒன்றுபடச் செய்தார். தவறு செய்பவன் வேந்தனாயினும் கண்டிக்கும் முறையறிந்து கண்டித்துச் சொல்லும் சொல்லுடையவராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/91&oldid=1111139" இலிருந்து மீள்விக்கப்பட்டது