பதிப்புரை -
'உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்' என்பது வள்ளுவர் காட்டும் உண்மை. இவ்வாறு இல்லையென் றிரப்பார்க்கும், இரவாது வாட்டங்கண்டு ஏழைகட்கும் ஈந்து புகழ்பெற்றோர் நம் தமிழக வள்ளல்கள் ஆவர்.
பூங்தலை அறாப் புனைகொடி முல்லையின் வாட்டங்கண்டு பொறாத ஈரநெஞ்சுடையான் வள்ளல் பாரியாவன்; இவனை யொத்த நன்நெஞ்சப் பாங்குகொண்ட ஓரி காரி, பேகன் போன்றவர் ஏனைய வள்ளல்களாவர். -
இவ்வள்ளல்கள் எழுவர் எனப் பண்டையோர் வகுத் தமைத்தனர். அவர்கட்குப்பின் வாழ்ந்த குமணன், ஓய் மானாட்டு நல்லியக்கோடன் ஆகிய இருவரையும் ஏனைய எழுவரோடு சேர்த்து வள்ளல் ஒன்பதின்மராக ஆக்கித் திரு. புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலை உதவி யுள்ளார்கள்.
இதனைச் சங்ககால அரசியல் வரிசையில் நான்காவதாக நன்முறையில் செப்பஞ்செய்து வெளியிட்டுள்ளோம்.
வளமைசெறிந்த இந்நூல், நம் தமிழ் மாந்தர்கள் கையகத்தும் நாவகத்தும் சென்றேறிப் பரவி நாட்டுக்கு நலம்பல பயக்குமென நம்புகிறோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.