பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கருவிளை–செருவிளை
கிளைடோரியா டர்னாட்டியா (Clitoria turnatea, Linn.)

“எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை” (குறிஞ். 68) என்பது கபிலர் வாக்கு.

கருவிளை என்பது கருங்காக்கணம்;
செருவிளை என்பது வெண்காக்கணம்.

இவையிரண்டும் வெவ்வேறு கொடிகள். கருநீலப்பூக்களை உடைமையின் ‘கருவிளை’ எனவும், வெண்ணிறப் பூக்களை உடைமையின் (அதற்கு எதிரான) ‘செருவிளை’ எனவும் வழங்கப்பட்டன. இவற்றுள் கருவிளையின் மலரைக் காதலர் பிரிந்த மகளிரின் நீர் வாரும் கண்களுக்கு உவமை கூறினார் கீரன் எயிற்றியனார். ‘கடிதடங்காக்கணமே’ என்று கருவிளை மலரைப் பெண் குறிக்குப் பிற்காலப் புலவர்கள் கூறுவது போலத் தாவரவியலிலும் இம்மலர் இக்குறியின் உள்ளுறுப்பை ஒத்தது என்னும் பொருள் தோன்ற, இதற்குக் ‘கிளைடோரியா என்ற பேரினப்பெயர் வகுத்தனர்!

கருவிளையும், செருவிளையும் தாவரவியலில் ஒரே சிற்றினப் பெயரால் குறிப்பிடப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் :
  1. கருவிளை
  2. செருவிளை
பிற்கால இலக்கியப் பெயர் :
  1. கருங்காக்கணம்
  2. வெண்காக்கணம்
உலக வழக்குப் பெயர் :
  1. நீலக்காக்கட்டான், கருங் காக்கட்டான், காக்கரட்டான், கண்ணி, காக்கணம்பூ
  2. வெள்ளைக் காக்கட்டான், வெண்காக்கணம், சங்கு புட்பம்.
தாவரப் பெயர் : கிளைடோரியா டர்னாட்டியா
(Clitoria turnatea, Linn.)