பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மராஅம்–செங்கடம்பு
பாரிங்டோனியா அக்யுடாங்குலா
(Barringtonia acutangula, Gaertn.)

சங்க இலக்கியங்களில் பயிலப்படும் ‘மராஅம்’ என்ற சொல் பொதுவாக வெண்கடம்பு, செங்கடம்பு என்ற இரு வகை மரங்களையும் குறிப்பிடும். எனினும், ‘கடம்பு’ என்ற சொல் ‘செங்கடம்ப’ மரத்தையே குறிப்பிடும்.

சங்க இலக்கியப் பெயர் : மராஅம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : கடம்பு
உலக வழக்குப் பெயர் : செங்கடம்பு, அடம்பு, அடப்ப மரம், கடம்பு மரம்.
தாவரப் பெயர் : பாரிங்டோனியா அக்யுடாங்குலா
(Barringtonia acutangula, Gaertn.)

மராஅம்–செங்கடம்பு இலக்கியம்

மராஅம் என்ற சொல் செங்கடம்பையுங் குறிக்கும். செங்கடம்பின் மலர் செந்நிறமானது. இதன் பூக்கள் தீயை ஒப்பன என்பர்.

“எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்து-மலைபடு. 498

வெண்கடம்பைப் போல வலிமிக்கது. ஆயினும், மலரியல்பால் செங்கடம்பு வேறுபட்டது. செங்கடம்பைக் குறிப்பதற்குக் கடம்பு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் இலைகள் நன்கு தழைத்து வளரும். மரத்தைச் சுற்றிலும் பரவித் தாழ்ந்து கவிழ்ந்து வளர்வதால் அடிமரப்பகுதி இருண்டிருக்கும் என்பர்.